நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்களின் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட சகல குற்றச் செயல்கள் தொடர்பிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இதன்படி இக்குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) அமைச்சின் அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்:
“கடந்த காலங்களில் சில சர்ச்சைக்குரிய மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பானது. அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட போதிலும், அது இதுவரையில் உறுதியாகவில்லை. அத்துடன், டொரிண்டன் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ரஜு ஜயவீரவின் மரணம் தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெறுகின்றன. இந்த மரணம் தற்போது சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நினைவுக்கு வரலாம் என்று நினைக்கின்றோம்; இதனால் அவர்கள் குழப்பமடைந்திருக்கலாம்.
எவ்வாறாயினும், இவர்களின் குழப்பங்களுக்கு நாங்கள் அடிபணியப்போவதில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மட்டுமல்லாது, நாட்டில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது எனப் பல சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

