Last Updated:
வளர்ச்சி குறியீடுகளில் பின்தங்கியிருந்த இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் மோடியின் ஆட்சியில் பெரும் பலன் பெற்றுள்ளன.
இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பதவி வகித்த, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு மற்றும் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவியில் இருந்த சாதனையை முறியடித்து, நாட்டின் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பதவி வகித்த, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியதற்காகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தனது அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் பிரதமருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மோடியின் இந்த ஆட்சிக்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வாழ்விலும் மிக முக்கிய மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
பிரதமரின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்துக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள குடியரசுத் தலைவர், ஏழை எளியோரின் நலன், அனைவருக்கும் சுகாதாரம், விவசாயிகளின் மேம்பாடு, நடுத்தர மற்றும் புதிய நடுத்தர வர்க்கத்தினரின் நலன்களைப் பாதுகாத்தல் எனப் பிரதமரின் “அனைவரையும் உள்ளடக்கிய தொலைநோக்குப் பார்வையும்” நடவடிக்கைகளும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மீது பிரதமர் கொண்டுள்ள அக்கறையும், வரிசையின் கடைசி முனையில் இருக்கும் நபரையும் உயர்த்துவது என்ற ‘அந்தியோதயா’ (Antyodaya) கொள்கைக்கான அவரது அர்ப்பணிப்பும் தன்னை ஆழமாகத் தொட்டதாகக் குடியரசுத் தலைவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது வெறும் கொள்கை ரீதியிலான தலையீடு மட்டுமல்லாமல், இந்தியாவின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடிமக்கள் மீதான பிரதமரின் ஆழமான உணர்திறனைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்த பகுதிகளுக்குப் பிரதமர் மோடியின் தலைமையில் சிறப்புக் கவனமும் அக்கறையும் செலுத்தப்பட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டியுள்ளார்.
குறிப்பாக, வளர்ச்சி குறியீடுகளில் பின்தங்கியிருந்த இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் மோடியின் ஆட்சியில் பெரும் பலன் பெற்றுள்ளன. இத்தகைய முயற்சிகள், வளர்ச்சியின் பலன்கள் கடைசி நபரையும் சென்றடைவதை உறுதி செய்யும் “மக்களை மையமாகக் கொண்ட நல்லாட்சியை” நிரூபிக்கின்றன என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒரு எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, இன்று இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் பிரதமராக வளர்ந்துள்ள மோடியின் இந்த வாழ்நாள் பயணம், இந்திய ஜனநாயகத்தின் மிக உன்னதமான அம்சத்தை உலகிற்கு மீண்டும் பறைசாற்றுகிறது. அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் நாட்டின் நலனுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் எவருக்கும் பொதுவாழ்வு எப்போதும் திறந்தே இருக்கும் என்பதை இது நிரூபிக்கிறது என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்
“இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளீர்கள்” – பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டு கடிதம்..


