Last Updated:
இருவருமே காயம் காரணமாக அடுத்தடுத்து விலகியிருப்பது, இளம் வீரர்களைக் கொண்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, காலில் ஏற்பட்டுள்ள புதிய தசைப்பிடிப்பு காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டம், வரும் ஜூன் 13-ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, வீரர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர்.
ஏற்கனவே நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக, இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது ஹர்திக் பாண்டியாவும் காயம் காரணமாக விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த பாண்டியா, தனது உடற்தகுதியை நிரூபித்து அணிக்குத் திரும்பத் தயாராக இருந்தார்.
இருப்பினும், துரதிர்ஷ்டவசமாகப் பயிற்சியின் போது அவருக்கு காலில் மீண்டும் கடுமையான தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர், காயம் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க அவரை முழுமையான ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து அவர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி, அடுத்து வரவிருக்கும் முக்கியமான இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அவர் விளையாடுவது தற்போது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருமே காயம் காரணமாக அடுத்தடுத்து விலகியிருப்பது, இளம் வீரர்களைக் கொண்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
அதே நேரத்தில், பாண்டியாவுக்கு மாற்றாக அணியில் களமிறங்கப் போகும் ஆல்-ரவுண்டர் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

