“விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ.) அமைப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. எனினும், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமை மக்களுக்கு உண்டு” என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அண்மையில் கைதான கிளிநொச்சி இளைஞன் தொடர்பான விவகாரத்தில், சட்ட அதிபரின் (சட்டமா அதிபர்) ஆலோசனைக்கு அமையவே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(09) ஒழுங்குப்பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், “விடுதலைப் புலிகள் அமைப்புடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத சங்கீத்சனன் என்ற இளைஞர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் ஆனந்த விஜேபால மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
“விடுதலைப் புலிகள் அமைப்புத் தொடர்பான பாடல்களைப் பாடி, அவற்றைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டிலேயே அந்த கிளிநொச்சி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞரின் கைது விவகாரம் தொடர்பாகப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட அதிபருடன் செவ்வாய்க்கிழமை(09) அன்று விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவிருந்தது. இதன் பின்னர், இந்த விவகாரத்தில் சாதகமான நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும்,” என்றார்.

