Last Updated:
உத்தர பிரதேச காசிப்பூரில் ஆட்டோவில் பெண்ணை தாக்கி பாலியல் துன்புறுத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி சன்னி காஷ்யப்பை போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் ஓடும் ஆட்டோவில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசிப்பூரில் பெண் ஒருவர் கடையில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 6 ஆம் தேதி வேலை முடிந்து மாலை நேரத்தில் கோமதி நகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது நீண்ட நேரமாகியும் பேருந்து வராததால் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஆட்டோ சென்றதும் பின்னால் இருந்து இளைஞர் ஒருவர் பெண்ணிடம் அத்துமீறியுள்ளார்.
அதைக் கண்டு அச்சம் கொண்ட பெண் சத்தம் போட முயற்சித்துள்ளார். உடனே, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அதில் இருந்த இளைஞர்கள் இருவரும் சேர்ந்து பெண்ணை தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே, அவர்கள் சத்தம் போடாதே எனக் கூறி பெண்ணின் கழுத்தை நெரித்துள்ளனர். தொடர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றவர்கள் திடீரென ஆட்டோவில் இருந்து அவரை சாலையில் தள்ளிவிட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில் காயமடைந்த பெண், வீட்டிற்கு சென்றதும் தனக்கு நேர்ந்த கொடூரத்தை குடும்பத்தினரிடம் கூறி கண்ணீர் சிந்தியுள்ளார். பின்னர், குடும்பத்தினர் காசிப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஆட்டோ பதிவெண் மூலம் ஓட்டுநர் 28 வயதான சன்னி காஷ்யப் என்றும், அவருடன் சென்றவர் 19 வயதான சுமித் காஷ்யப் என்பதையும் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்து சுமித்தை, ஞாயிற்றுக் கிழமை அன்று போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் முக்கிய குற்றவாளியான சன்னி காஷ்யப் இருப்பிடத்தையும் அறிந்து கொண்டனர். இந்த நிலையில் சன்னி காஷ்யப்பை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.
இதனால், போலீசார் தற்காப்பு நடவடிக்கையாக அவரை நோக்கி பதில் தாக்குதல் தொடுத்தனர். இதில், காலில் குண்டடிபட்ட சன்னி காஷ்யப் சரிந்து விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளி மீது ஏற்கனவே ஆள் கடத்தல், பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
அதன் பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். ஓடும் ஆட்டோவில் பெண்ணை தாக்கி பாலியல் துன்புறுத்தல் அளித்த முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் அத்துமீறல்.. அடுத்த நொடி நடந்த ஷாக்.. உத்தர பிரதேசத்தில் பகீர் சம்பவம்!


