யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட
அகழ்வுப் பணிகளின் போது, நேற்று ஒரே நாளில் மேலும் 16 மனித எலும்புக்கூடுகள்
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன் மூலம் செம்மணி மனிதப்
புதைகுழியிலிருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த
எண்ணிக்கை 318 ஆக உயர்வடைந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், விசேட நிபுணர்களின் முன்னிலையில் நேற்று அகழ்வுப்
பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
ஒரே நாளில் 16 மனித எலும்புக்கூடுகள்
நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளின் 4
தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று
மற்றும் இரண்டு ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் மொத்தமாக இதுவரை 318 மனித
எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 302 மனித
எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இதுவரை முழுமையாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளன.
நேற்றைய அகழ்வுகளின் போது, மனித உடல்கள் மிகக் கொடூரமான முறையில்
புதைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலான பல தடயங்கள் சிக்கியுள்ளன.
குறிப்பாக, எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று தொடுகையுற்ற (ஒன்றின்
மேல் ஒன்றாகப் பின்னப்பட்ட) நிலையில் இரு வெவ்வேறு இடங்களில் அடையாளம்
காணப்பட்டுள்ளன.
விசேட குவியல்
அவற்றில் ஒரு பகுதியில் ஆறு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், பிறிதொரு
பகுதியில் நான்கு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகத்
தொடுகையுற்றவாறு கண்டறியப்பட்டுள்ளன.

இதில் விசேடமாக, அடையாளம் காணப்பட்ட
எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் ஒன்று, அதன் கால்கள் இரண்டும் பின்பக்கமாக
மடிக்கப்பட்ட நிலையிலேயே புதைக்கப்பட்டுள்ளமை தடயவியல் நிபுணர்களால் உறுதி
செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, மனித என்புகளின் எச்சங்கள் அடங்கிய விசேட குவியல் ஒன்றும் நேற்றைய
அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் உள்ள மண்ணைச்
சீர்செய்து, எச்சங்களைச் சேதமடையாமல் சுத்தப்படுத்தும் பணிகளில்
அகழ்வாராய்ச்சிப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

