பாஸ் மற்றும் அம்னோ இடையே சாத்தியமான கூட்டணி குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்தவொரு கூட்டு முடிவும் எட்டப்படவில்லை என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஜொகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக, ஓர் உடன்பாட்டின் பகுதியாக பாஸ் கட்சிக்கு இடங்களும் சில பதவிகளும் அம்னோ வால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை துவான் இப்ராஹிம் நிராகரித்தார்.
“தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பாஸ் கட்சிக்கு இடங்களும் பதவிகளும் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் வெறும் வதந்திகளே” என்று அவர் கூறியதாக வட்டார்ங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
குபாங் கெரியான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பாஸ் கட்சி தொடர்ந்து போட்டியிடும் என்றும் கூறினார்.
“நாங்கள் ஏற்கனவே எங்கள் மாநில தேர்தல் இயந்திரத்தைத் தொடங்கிவிட்டோம், இப்போது நாங்கள் போட்டியிடும் இடங்களில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று பெரிகாத்தான் நேசனல் கூட்டணியின் துணைத் தலைவருமான துவான் இப்ராஹிம் கூறினார்.
வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களிலும் 16-வது பொதுத் தேர்தலிலும் (GE16) மோதல்களைத் தவிர்ப்பதற்கான ஓர் ஏற்பாடாக, ஜொகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்காவில் பாஸ் கட்சிக்கு அம்னோ பல மாநில மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறுகையில், முந்தைய நாள் இரவு பாஸ் மற்றும் அம்னோ தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில், ஒத்துழைப்பதற்கான வழிகள் மற்றும் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைத் தக்கவைப்பது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சந்திப்பில் கட்சித் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்றும், முவாபகத் நேசனல் கூட்டணியைப் புதுப்பிப்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் ஜாஹித் கூறினார்.
முன்னதாக, அதிகாரப்பூர்வ பெரிகாத்தான் நேசனல் வழிமுறைகளைப் பின்பற்றாமல், அம்னோ வுடனான தனது முவாஃபகத் நேசனல் கூட்டணியைப் புதுப்பிக்க பாஸ் முயற்சிப்பதாக, பெயர் குறிப்பிட விரும்பாத பெர்சத்து தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியதாக வட்டார்ங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.
வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பில், அம்னோ மற்றும் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுடன் தொடர்புடைய முக்கியப் பிரமுகர்களை உள்ளடக்கிய ஒரு புதிய அரசியல் ஏற்பாடு குறித்து பாஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார்.
முவாஃபகத் நேசனல் கூட்டணி 2019-ஆம் ஆண்டில் அம்னோ மற்றும் பாஸ் ஆகிய கட்சிகளால் முறைப்படி உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டே பெர்சத்து கட்சியுடன் இணைந்து பெரிகாத்தான் நேசனல் கூட்டணியை பாஸ் உருவாக்கியதைத் தொடர்ந்து, முவாஃபகத் நேசனல் கூட்டணி முற்றிலும் முறிவடைந்தது.
-fmt
