பாறுக் ஷிஹான்
வீட்டிலிருந்த சிறுமியைக் முகவரி கேட்பது போல் அழைத்து, வாயைப் பொத்தி வேனில் கடத்திச் சென்று கூட்டுத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பால் மறுநாள் வியாழக்கிழமை (04) முறைப்பாடு செய்யப்பட்டது.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில், கல்முனை பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி மற்றும் பொலிஸ் சார்ஜன் ஏ. ஆதம்பாவா உள்ளிட்ட குழுவினர் சந்தேகநபரைக் கைது செய்தனர். நேற்று வெள்ளிக்கிழமை (05) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவத்தின் பின்னணி:
கல்முனை மாநகரப் பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்கு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட 16 வயதுடைய சிறுமி (பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்) தனது தாயாருடன் ஆடை கொள்வனவிற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டு, தொலைபேசி எண்களும் பரிமாறப்பட்டுள்ளன. இதன் பின்னர், இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக IMO, WhatsApp ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாகத் தொடர்பில் இருந்துள்ளனர்.
இந்நிலையிலேயே, கடந்த புதன்கிழமை இரவு 11:30 மணியளவில், அவ்விளைஞன் வாடகைக்கு எடுத்த வேன் ஒன்றில், தான் பணிபுரியும் கடையில் வேலை செய்யும் மற்றொரு 56 வயதுடைய நபரையும் (சாரதியாக) அழைத்துக் கொண்டு சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
கடத்தலும் கூட்டுத் துஷ்பிரயோகமும்:
அப்போது வீட்டில் இருந்த சிறுமியைத் தொலைபேசியில் அழைத்த இளைஞன், முகவரி ஒன்றைக் காட்டுமாறு கூறியுள்ளார். அதனை நம்பி வீதிக்கு வந்த சிறுமியின் வாயைப் பொத்தி, பலவந்தமாக வேனில் ஏற்றி அம்பாறை மாவட்டத்தின் மத்திய முகாம் பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளனர்.
அங்குள்ள பாழடைந்த வர்த்தகக் கட்டடம் ஒன்றிற்குச் சிறுமியைக் கொண்டு சென்று, முதலில் அந்த இளைஞனும், அதன் பின்னர் 56 வயதுடைய மற்றைய நபரும் மாறி மாறித் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். பின்னர் சிறுமியை அக்கரைப்பற்று பகுதியில் இறக்கிவிட்டு இருவரும் தப்பியோடியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை:
இதன் பின்னர், அப்பகுதியால் வந்த பேருந்து ஒன்றின் உதவியுடன் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்து முறைப்பாடு செய்துள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு 25 வயதுடைய முதன்மைச் சந்தேகநபரைக் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய மற்றைய சந்தேகநபரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காகக் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாக அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


