இந்தத் தாக்குதலில், அமெரிக்க ராணுவத் தளங்களுக்குப் பாதிப்பு இல்லை என்றாலும், பஹ்ரைன், குவைத் நாடுகளில் பொதுப் பயன்பாட்டு உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஈரானியர் நடத்திய டிரோன் தாக்குதலில், குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக அங்கு விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும், சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக குவைத் ராணுவம் கூறியுள்ளது.
ஈரானிய காவல்படை வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை!
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, தாங்கள் திட்டமிட்டபடி பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படைத் தளத்தையும், குவைத்தில் உள்ள அமெரிக்க ஏவுகணை மற்றும் ஹெலிகாப்டர் தளங்களையும் தாக்கி அழித்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது. Tit for tat என்ற வழக்கமான அணுகுமுறையை கைவிட்டுவிட்டதாகவும், இனிவரும் காலங்களில் அமெரிக்காவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் குறைந்தது ஒன்றரை மடங்கு வீரியத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா
இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தியுள்ள ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழு செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெசாவி (Ebrahim Rezaei) “அமெரிக்காவிற்கு அமைதிப் பேச்சுவார்த்தையை விட ஏவுகணைகளின் மொழிதான் நன்றாகப் புரிகிறது” என்று கூறியுள்ளார். இரு தரப்பும் வெளிப்படையாக தாக்கிக்கொண்டதைத் தொடர்ந்து, உலக அளவில் பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டது. போர் பதற்றம் எதிரொலியாக, ஆசியச் சந்தைகள், ஐரோப்பியச் சந்தைகள் மற்றும் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஆகிய அனைத்தும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை அவசரமாக விற்றுத் தீர்த்து வருகின்றனர்.
ஈரானின் கெஷ்ம் தீவை குறிவைத்த அமெரிக்கா… இந்தத் தீவில் என்ன உள்ளது?
அமெரிக்கா தளங்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, ஈரானின் கெஷ்ம் தீவை (Qeshm) குறி வைத்து அமெரிக்காவின் CENTCOM கடுமையான தாக்குதலை நடத்தியது. கெஷ்ம் தீவு (Qeshm Island) பெர்சிய வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானுக்குச் சொந்தமான மிகப்பெரிய தீவு. சர்வதேச எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணைக்கு மிக அருகில், ஈரானின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ளது.
இந்தத் தீவு, அதன் தனித்துவமான பாறை அமைப்புகள், பள்ளத்தாக்குகள், குகைகள் மற்றும் கடல்சார் காடுகளுக்காக அறியப்படுகிறது. யுனெஸ்கோவின் உலகளாவிய புவிசார் பூங்காக்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பாரசீக வளைகுடாவில் பயணிக்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் சர்வதேச எண்ணெய் கப்பல்களை விரைவாகச் சூழ்ந்து தாக்கும் வல்லமை கொண்ட நூற்றுக்கணக்கான சிறிய, அதிவேகப் படகுகள் இத்தீவின் மறைவிடங்களில் தான் நிறுத்தப்பட்டுள்ளன.
கெஷ்ம் தீவு
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் இத்தீவில் உள்ள மலைக் குகைகளிலும் நிலத்தடித் தளங்களிலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. கெஷ்ம் தீவின் பாறை அமைப்புகளைப் பயன்படுத்தி, ஈரான் ஏராளமான நிலத்தடி ராணுவக் கட்டமைப்புகளை உருவாக்கி வைத்துள்ளது. அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் எளிதில் அழிக்க முடியாதவாறு, Bunker-buster குண்டுகளையும் தாங்கும் திறன் கொண்ட “ஏவுகணை நகரங்கள்” இங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஈரானின் நவீன ரேடார் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் Electronic Warfare சாதனங்கள் இத்தீவில் நிறுவப்பட்டுள்ளன. இவை பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படை (US 5th Fleet) மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் நடமாட்டங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கின்றன. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தலைமையகம் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் ஆகியவற்றுக்கு மிக அருகில் கெஷ்ம் தீவு அமைந்துள்ளது.
இதனால், அமெரிக்காவுடன் போர் மூளும் பட்சத்தில், மிகக் குறுகிய தூர ஏவுகணைகள் மற்றும் தற்கொலை படை டிரோன்கள் மூலம் அமெரிக்க தளங்களைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுதளமாக இத்தீவை ஈரான் பயன்படுத்துகிறது. இதன் காரணமாகவே, அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கத்திற்குச் சவால் விடும் ஈரானின் “மூழ்காத போர்க்கப்பல்” என இத்தீவு வர்ணிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை
கெஷ்ம் தீவு (Qeshm Island), ஹார்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) நுழைவாயிலில், அதன் மிகக் குறுகிய பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இந்த சர்வதேச கடல்வழிப் பாதையைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஹார்முஸ் நீரிணையின் அகலம் மிகக் குறைவானது. இதில் சர்வதேசக் கப்பல்கள் பயணிக்கும் கடல் வழிப்பாதை இன்னும் குறுகலானது. கெஷ்ம் தீவு இந்த நீரிணைக்கு இணையாக, மிக நீண்ட பரப்பளவோடு அமைந்துள்ளது. இதனால், இந்த நீரிணை வழியாகச் செல்லும் ஒவ்வொரு வணிகக் கப்பலும், எண்ணெய் டாங்கரும் கெஷ்ம் தீவின் மிக அருகிலேயே கடந்து செல்ல வேண்டும். இத்தீவில் இருந்து கொண்டு முழு கடல் வழிப் பாதையையும் ஈரானால் எளிதாகக் கண்காணிக்க முடியும்.
பாரசீக வளைகுட கதவின் தாழ்ப்பாள்!
அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் மோதல் ஏற்படும் போது, கெஷ்ம் தீவை ஒரு ராணுவ அரணாகப் பயன்படுத்தி ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட போதிய உத்திகளை ஈரான் வைத்துள்ளது. இத்தீவை மூடினால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் ஸ்தம்பித்து, சர்வதேசப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும். கெஷ்ம் தீவின் தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகள் நேரடியாக ஹார்முஸ் நீரிணையை நோக்கியவாறு அமைந்துள்ளன. ஹார்முஸ் நீரிணை பாரசீக வளைகுடாவின் கதவு என்றால், அந்தக் கதவின் ‘தாழ்ப்பாள்’ கெஷ்ம் தீவு.
இத்தீவு தன் வசம் இருப்பதால் மட்டுமே ஈரானால் ஒட்டுமொத்த சர்வதேச எண்ணெய் வர்த்தகப் பாதையையும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தையும் தன் அழுத்தத்தின் கீழ் வைத்திருக்க முடிகிறது. கெஷ்ம் தீவில் உள்ள நிலத்தடி ஏவுகணைச் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் டிரோன் ஏவுதளங்களை குறிவைத்து அமெரிக்கா துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில ஏவுகணை ஏவுதளங்களும், கண்காணிப்பு ரேடார்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
கெஷ்ம் தீவு அருகே ஏற்பட்ட கடும் அச்சுறுத்தல்…
ஹார்முஸ் நீரிணையை அச்சுறுத்தப் பயன்படும் IRGC-ன் அதிவேகத் தாக்குதல் படகுகள் நிறுத்தப்பட்டிருந்த கடற்படை மறைவிடங்கள் மற்றும் சிறிய ரகத் துறைமுகங்கள் அமெரிக்க ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன. கெஷ்ம் தீவுக்கு அருகேயுள்ள ஈரானிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், சேமிப்பு முனையங்கள் மற்றும் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலால், அங்கு கடுமையான தீ விபத்து மற்றும் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
கெஷ்ம் தீவு
சில பகுதிகளில் ராணுவத் தகவல் தொடர்பு மற்றும் ரேடார் இணைப்புகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தீவின் மீதான குண்டுவீச்சு மற்றும் கடலில் எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் கசிவு, இப்பகுதியின் அரிய கடல்சார் வாழ்விடங்களுக்கும் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான ஷாக் தகவல்… விளக்கம் சொன்ன டிரம்ப்!
கெஷ்ம் தீவு ஒரு Free Trade Zone-னும் கூட. இந்த திடீர் வான்வழித் தாக்குதல் காரணமாக தீவில் உள்ள வணிக வளாகங்கள், உள்ளூர் போக்குவரத்து மற்றும் துறைமுக நடவடிக்கைகள் முழுமையாக முடங்கியுள்ளன. பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடங்கிவிட்டதாக வெளியான செய்திகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார்.
ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்படவிருந்த ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அதற்கான தகவல் பரிமாற்றங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதாகச் செய்தி வெளியிட்டது. இச்செய்தி, முற்றிலும் தவறானது என குறிப்பிட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் நிற்கவில்லை; இன்று வரை தொடர்ந்து இடைவிடாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான்
பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட டிரம்ப், அதே நேரத்தில் ஈரானுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் மேற்கொண்டு வரும் அமெரிக்க எதிர்ப்பு மற்றும் பிராந்திய விரோதப் போக்குகளை இனிமேலும் அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். “இந்த பேச்சுவார்த்தைகள் எங்கு போய் முடியும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், ஈரான் ஏதோ ஒரு வழியில் அமெரிக்காவுடன் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டியே ஆக வேண்டும்; அதற்கான நேரம் வந்துவிட்டது” என டிரம்ப் கூறியுள்ளார். அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறினாலும், ஈரான் தரப்பில் அவநம்பிக்கையும் நிலவுகிறது.
ஈரானின் அவநம்பிக்கை… காரணம் என்ன?
இதற்கு முதன்மையான காரணம் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை பேசிக்கொண்டே, மறுபுறம் அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்துவதை ஈரான் கடுமையாக எதிர்க்கிறது. லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதையும் ஈரான் சுட்டிக்காட்டுகிறது. போர் நிறுத்தம் என்பது அனைத்து முனைகளிலும் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது ஈரானின் நிபந்தனை. அமெரிக்காவின் வெறும் வாய்மொழி வாக்குறுதிகளையோ அல்லது தற்காலிகப் போர் நிறுத்தப் பிரகடனங்களையோ நம்ப ஈரான் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக, பொருளாதாரத் தடைகளை நீக்குவது உள்ளிட்டவைகளில் “உறுதியான மற்றும் நடைமுறைச் சாத்தியமான சரிபார்ப்பை” அதாவது Tangible Verification-னை ஈரான் கோரி வருகிறது.
ஈரான்
அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரும் டிரம்பின் சொந்தக் கட்சியிலுள்ள சிலரும் ஈரானுடன் மென்மையான அணுகுமுறையைக் கையாள்வதாக டிரம்பை விமர்சித்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களை “வெறும் சத்தங்கள்” என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், “பொறுமையாக இருங்கள், இறுதியில் எல்லாம் சுமுகமாக முடியும்” என்று கூறியுள்ளார். இதில், மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால், களத்தில் இரு நாட்டு ராணுவங்களும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தீவிரமாகத் தாக்கிக் கொள்கின்றன. அதே நேரத்தில் பின்னணியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானியப் பிரதிநிதிகள் தங்களின் ரகசியப் பேச்சுவார்த்தைகளை ஒரு நாள் கூட நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதாவது, “வெளியே யுத்தம், உள்ளே ராஜதந்திரம்” என்ற இரட்டை உத்தி இங்கு அரங்கேறி வருகிறது.

