யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது,
சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட
புதிதாக மேலும் 5 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு
மீட்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின்
15ஆம் நாள் அகழ்வு நடவடிக்கைகள் நேற்றுப் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவுக்கு
அமைய, தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.
மனித எலும்புக் குவியல்கள்
நேற்றைய அகழ்வின் போது சிறுவர்களினது எனச் சந்தேகிக்கப்படும் 4 எலும்புத்
தொகுதிகள் உட்பட புதிதாக 5 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 6 மனித எலும்புத்
தொகுதிகளும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம்
ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் மொத்தமாக இதுவரை 275 மனித எலும்புத் தொகுதிகள்
அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 272 மனித எலும்புத் தொகுதிகள் தற்போது
முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்று அகழ்வுகளின் போது மனித எலும்புக் குவியல்கள் இரண்டும் புதிதாக
அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதில் ஒரு எலும்புக்
குவியலில் மனித மண்டையோடுகள் உடைந்த நிலையில் சிதைந்த துண்டுகளாகக்
காணப்படுகின்றன.
அகழ்வுப் பணிகள்
அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் சட்ட
மருத்துவ நிபுணர்களால் முறைப்படி சேகரிக்கப்பட்டு, நீதிமன்றக் கட்டுக் காவலில்
பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு,
நேற்று வரையிலான முதல் 15 நாள்கள் இடம்பெற்ற அகழ்வுகளின் போது மட்டும் இதுவரை
34 மனித எலும்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

