Last Updated:
உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டா பிரபலம் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வரதட்சணை கொடுமையால் பெண்ணை அடித்துக் கொன்றுவிட்டு தற்கொலை நாடகம் போடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்த இளம் ஜோடி ஒன்றாக சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளது. 8 லட்சம் ஃபாலோயர்களை கொண்டு ஊர் மெச்ச வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் வரதட்சணை மூலம் பிரச்சினை உருவாகியுள்ளது. நடந்தது என்ன?
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் சாகர் ராஜ்புத். இவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துள்ளார். இவருக்கு கான்பூரைச் சேர்ந்த மான்சி என்பவர் இன்ஸ்டா மூலம் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு திருமணத்தில் முடிந்துள்ளது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் விமரிசையாக திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணமான பின் இருவரும் ஜோடியாக சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்கள் போட்டு லைக்ஸ் அள்ளியுள்ளனர். இளம் ஜோடி பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு பைக்கில் உல்லாச பயணம் மேற்கொண்டு தங்களது மகிழ்ச்சியை ஊரறிய வெளிப்படுத்தியுள்ளனர். வசந்தம் வீசிய இளம் தம்பதியின் வாழ்க்கையில் வரதட்சணை மூலம் புயல் வீசியுள்ளது. ஒரு கட்டத்தில் சாகர் ராஜ்புத் குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு மான்சியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திருமணத்தின் போது 7 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொடுத்ததுடன் நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என ஏராளமான பொருட்கள் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளன. அத்தனையையும் வாங்கிக் கொண்டு மேலும் வரதட்சணை வாங்கிவரச் கூறி மாப்பிள்ளை வீட்டார் டார்ச்சர் கொடுத்துள்ளனர். அண்மையில் புதிதாக சொகுசு கார் ஒன்று வாங்கி வரச் சொல்லி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளம்பெண் மான்சி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் பெற்றோருக்கு சாகர் ராஜ்புத் குடும்பத்தினர் தகவல் கொடுத்துள்ளனர். அதைக் கேட்டு பதறியடித்துக் கொண்டு அவரின் குடும்பத்தினர் ஓடி வந்துள்ளனர். தங்களது மகளை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்ததாக கூறி மாப்பிள்ளை வீட்டார் நாடகமாடுவதாக குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு கணவரின் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர். வரதட்சணை புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சாகர் ராஜ்புத், அவரின் தந்தை உட்பட 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உடற்கூராய்வு அறிக்கையின் அடிப்படையிலும், விசாரணை முடிவிலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டா பிரபலம் வரதட்சணை கொடுமையால் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


