
உயிரிழந்தவர்களில் 13 பாதசாரிகள், 7 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பின்னிருக்கைப் பயணி, ஒரு சைக்கிள் ஓட்டுநர், ஒரு சாரதி மற்றும் ஒரு பயணி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
கடந்த மே 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 19 பாரதூரமான வீதி விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர இந்த தகவலை வெளியிட்டார்.
வெசாக் பண்டிகை காலமான மே 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் மொத்தமாக 19 உயிரிழப்பு விபத்துகள் பதிவாகியுள்ளன. இதற்கு மேலாக 29 பாரதூரமான விபத்துகள், 96 சிறிய விபத்துகள் மற்றும் 19 சொத்து சேத விபத்துகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த விபத்துகளுடன் தொடர்புடைய வாகனங்களில் 15 மோட்டார் சைக்கிள்கள், 3 ஓட்டோக்கள், 2 லொறிகள், 2 தனியார் பஸ்கள் மற்றும் ஒரு கெப் வாகனம் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் 13 பாதசாரிகள், 7 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பின்னிருக்கைப் பயணி, ஒரு சைக்கிள் ஓட்டுநர், ஒரு சாரதி மற்றும் ஒரு பயணி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இதற்கிடையில், நேற்று (01) ஹோமாகம – மீகொட பகுதியில் வெசாக் தானசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற மற்றொரு துயரச் சம்பவத்தில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்ததில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.
வெசாக் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகமாகப் பயணம் மேற்கொள்வதால் வீதிப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். அதிக வேகம், கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டுதலே பல விபத்துகளுக்குக் காரணமாக இருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

