Last Updated:
லீக் சுற்றில் இதே அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபியை வீழ்த்திய அனுபவம் குஜராத் அணிக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் இறுதிப் போட்டி மழையால் ரத்தானால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டிக்கு மழையால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் இந்த பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், போட்டி மழையினால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? இதற்கான மாற்று நாள் (Reserve Day) விதிகள் என்னென்ன? என்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. இரு அணிகளுமே தங்களின் இரண்டாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளதால், முழுமையான போட்டி நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஐபிஎல் விதிகளின்படி, இறுதிப்போட்டி நடைபெறும் இன்று மழை பெய்தால், ஆட்டத்தை இன்றே நடத்தி முடிக்க கூடுதல் நேரம் (Extra Time) பயன்படுத்தப்படும். ஓவர்கள் குறைக்கப்பட்டு ஒரு சூப்பர் ஓவர் (Super Over) ஆவது நடத்த நிர்வாகம் முயற்சிப்பார்கள். இருப்பினும், கடுமையான மழை காரணமாக இன்று ஆட்டம் சாத்தியமில்லாமல் போனால், அடுத்த நாள் ‘மாற்று நாள்’ (Reserve Day) ஆகப் பயன்படுத்தப்படும். அதாவது நாளை ஆட்டம் மாற்றப்பட்டால், இன்று போட்டி எங்கு நிறுத்தப்பட்டதோ, அதே ஓவரில் இருந்து ஆட்டம் மீண்டும் தொடங்கும்.
ஆனால், வானிலை கணிப்புகளின்படி மாற்று நாளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை திட்டமிட்ட நாளிலும், அதற்கு அடுத்த மாற்று நாளிலும் கூட தொடர் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டால், ஐபிஎல் வரலாற்றில் மிக அரிதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் ஐபிஎல் கோப்பையை கூட்டாகப் பகிர்ந்து கொள்ளும் (Shared Trophy) என அறிவிக்கப்படும்.
இந்தத் தொடர் முழுவதும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணிகளுக்கும் இது சற்றே ஏமாற்றமளிக்கும் முடிவாக இருந்தாலும், விதிகளின்படி இதுவே இறுதி முடிவாகும்.
லீக் சுற்றின் முடிவில் ஆர்சிபி மற்றும் ஜிடி ஆகிய இரு அணிகளுமே தலா 14 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன. இதில் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
தொடர்ந்து நடைபெற்ற குவாலிபையர் 1 போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி ஆர்சிபி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. குஜராத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. குவாலிபையர் 1 வெற்றியை வைத்து ஆர்சிபி அணி சற்று உளவியல் ரீதியாக முன்னிலையில் இருந்தாலும், லீக் சுற்றில் இதே அகமதாபாத் மைதானத்தில் ஆர்சிபியை வீழ்த்திய அனுபவம் குஜராத் அணிக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.


