Last Updated:
இந்த நூற்றாண்டின் சிறந்த 25 சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 3ஆம் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மும்பையில் நடைபெற்ற கிரிக்இன்போ விருதுகள் (Cricinfo Honours) விழாவில், 21ஆம் நூற்றாண்டின் (2000-2025) மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வசிம் அக்ரம், கிரெக் சேப்பல், ஃபாஃப் டு பிளெசிஸ், ரவி சாஸ்திரி உள்ளிட்ட 25 உலகத்தரம் வாய்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய நடுவர் குழு இந்தத் தேர்வினை நடத்தியுள்ளது. கடந்த 25 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பேட்டராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் உலகிலேயே அதிக ரன்கள், அதிக சதங்கள் மற்றும் அரைசதங்கள் அடித்த சாதனையை தன்வசம் வைத்துள்ள சச்சினுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருது குறித்துப் பேசிய சச்சின், தன்னுடன் விளையாடிய வீரர்களே நடுவர்களாக இருந்து தன்னைத் தேர்வு செய்தது நெகிழ்ச்சியளிப்பதாகவும், விமர்சகர்களும் ஆதரவாளர்களும் கொடுத்த சவால்களே தன்னை இந்த அளவிற்கு உயர்த்தியதாகவும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக ஜாக் காலிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 13,289 ரன்களும் 292 விக்கெட்டுகளும் வீழ்த்தி காரி சோபர்ஸுக்கு இணையாகக் கருதப்படும் காலிஸ், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் தனது அணி பெற்ற டெஸ்ட் தொடர் வெற்றிகளையும், இந்தியாவுக்கு எதிராக அடித்த 201 ரன்களையும் தனது வாழ்நாளின் சிறந்த தருணங்களாகப் பகிர்ந்துள்ளார்.
நூற்றாண்டின் சிறந்த பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இலங்கையின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன், 2010இல் 800 விக்கெட்டுகளுடன் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது தனக்குக் கிடைத்த பெருமை என அவர் நடுவர் குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பெண்கள் கிரிக்கெட்டில், 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங்கில் 60க்கு மேல் சராசரியும், பந்துவீச்சில் 20க்கும் குறைவான சராசரியும் கொண்டுள்ள பெர்ரி, ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிப் பாதையில் 2020ஆம் ஆண்டு மெல்போர்னில் வென்ற டி20 உலகக்கோப்பையே தனது வாழ்வின் மிக முக்கிய தருணம் என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நூற்றாண்டின் சிறந்த 25 சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 3ஆம் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். தற்போதைய வீரர்களில் ஜோ ரூட் (9), ஜஸ்பிரித் பும்ரா (15), கேன் வில்லியம்சன் (16) மற்றும் மிட்செல் ஸ்டார்க் (17) ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
டி20 கிரிக்கெட்டுக்கான சிறப்புப் பிரிவில், அதிரடி பேட்டிங்கிற்குப் பெயர் பெற்ற தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் சிறந்த டி20 பேட்டராகவும், இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த டி20 பந்துவீச்சாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விருது தனக்கு மிகவும் ஸ்பெஷலானது என்றும், கிரிக்கெட் தனக்கு வாழ்வின் பல முக்கிய பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது என்றும் பும்ரா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

