
கனகராஜா சரவணன்
மட்டக்களப்பு — கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூனியன் கொலனி பகுதியில், பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த வீடு ஒன்றை சனிக்கிழமை (30) இரவு பொலிஸார் முற்றுகையிட்டனர். இம்முற்றுகையின் போது 72 பியர் ரின்கள் (Beer Tins) மற்றும் கால் போத்தல் அளவிலான 25 மதுபானப் போத்தல்களை மீட்டதுடன், 42 வயதுடைய பெண் வியாபாரி ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான வை. விஜயராஜா தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டை சம்பவ தினமான சனிக்கிழமை (30) இரவு முற்றுகையிட்டனர்.
இதன்போது, அங்கு சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த, அப்பகுதியில் பிரபலமான 42 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்ததுடன், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 72 பியர் ரின்களையும், கால் போத்தல் அளவிலான 25 மதுபானப் போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கல்குடா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

