Last Updated:
நீதிமன்றத்தில் தீர்ப்பின் முக்கியப் பகுதியை மட்டும் வாசித்தால் போதுமானது என்றும் விரிவான காரணங்களுடன் கூடிய முழுத் தீர்ப்பை 7 நாட்களுக்குள் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களும் ஒரு வழக்கின் விசாரணையை முடித்து ஒத்தி வைத்தால், 3 மாதங்களுக்குள் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், ஒரு வழக்கில், கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே தீர்ப்பு வழங்கப்பட்ட போதும், இணையதளத்தில் அதன் நகல் பதிவேற்றப்படவில்லை எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142-இன் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் பொதுவான உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதன்படி, தனிமனித சுதந்திரம், ஜாமின் தொடர்பான வழக்குகளில் கூடுதல் வேகத்துடன் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக, ஜாமின் மனுக்கள் மீதான உத்தரவுகளை, விசாரணை முடிந்த அதே நாளில் அல்லது அதிகபட்சமாக அடுத்த நாளுக்குள் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஜாமின் பெற்ற விசாரணைக் கைதிகளை அதே நாளில் அல்லது அதிகபட்சமாக அடுத்த நாளுக்குள் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தீர்ப்பின் முக்கியப் பகுதியை மட்டும் வாசித்தால் போதுமானது என்றும் விரிவான காரணங்களுடன் கூடிய முழுத் தீர்ப்பை 7 நாட்களுக்குள் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், அந்த வழக்கை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பார்வைக்கு பதிவாளர் கொண்டு செல்லலாம் என்றும், அவர் மேலும் 2 வாரக் கால அவகாசம் வழங்கலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை நீதிபதிகள் வழங்கி உள்ளனர்.
அப்போதும் தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், அந்த வழக்கு வேறொரு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு விவரங்கள் 30 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படாவிட்டால், அந்த வழக்கைத் திரும்பப் பெற்று, மீண்டும் புதிய விசாரணைக்கு அனுப்பக் கோரி மனுத் தாக்கல் செய்யலாம் என்றும் தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டுள்ளது.


