பிள்ளைகளின் தாய்க்கு புற்றுநோய் எனக்கூறி, தனது பிள்ளைகளை வைத்தே பொதுமக்களிடம் பிச்சை எடுத்து இவர் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்தப் பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபர், நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர், தனது மனைவிக்கு புற்றுநோய் என்றும், அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி, பிள்ளைகளுடன் மட்டக்களப்பு வந்துள்ளார். ஆனால், உண்மையில் இவரது மனைவிக்கு புற்றுநோய் இல்லை என்பதும், அவர் மாத்தறையில் உள்ள வீட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
பிள்ளைகளின் தாய்க்கு புற்றுநோய் எனக்கூறி, தனது பிள்ளைகளை வைத்தே பொதுமக்களிடம் பிச்சை எடுத்து இவர் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் பயன்படுத்திய அடையாள அட்டை பதுளையைச் சேர்ந்த வேறொரு நபருடையது என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு அந்த அடையாள அட்டையைத் தொலைத்த நபர், தற்போது கடவத்தையில் வசித்து வருகின்றார். அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் இந்தத் திருடப்பட்ட அடையாள அட்டையைத் தனது குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தியுள்ளார்.
கைதான நபருக்கு எதிராக அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அநுராதபுரம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களில் ஏற்கெனவே முறைப்பாடுகள் இருப்பதோடு, அவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரின் தாயாரையும் விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் 3 வயது ஆண் பிள்ளையும், 5 வயது பெண் பிள்ளையும் மூச்சுத்திணறலால் உயிரிழந்தனர்.




