த.வெ.க. தலைவர் விஜய்யை நினைத்து சந்தோஷ பட வேண்டும் எனவும் அவர் ஏதாவது வித்தியாசமாக செய்வார் என்று தான் அவருக்கு மக்கள் வாக்களித்து உள்ளார்கள் என்றும் கோவையில் திரைப்பட நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேற்று தனியார் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் சிவக்குமார் தெரிவிக்கையில்,
த.வெ.க. தலைவர் விஜய்யை நினைத்து சந்தோஷ பட வேண்டும். அவர் ஏதாவது வித்தியாசமாக செய்வார் என்று தான் அவருக்கு மக்கள் வாக்களித்து உள்ளார்கள். மாற்றம் என்பது உலகத்தில் தவிர்க்க முடியாத விஷயம்.
பெருந்தலைவர் காமராஜரை போல ஒரு தலைவரை எங்காவது பார்க்க முடியுமா? அவரையே தோற்கடித்தார்கள். காமராஜர் வேண்டாம்; மாற்றம் வேண்டும் என்று அப்போது மக்கள் நினைத்தார்கள். தி.மு.கவும் குறிப்பிட்ட ஆண்டுகள் ஆண்டன. தற்போது அதுவும் வேண்டாம் என்று மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளார்கள். யார் வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்கிறார்கள். மக்கள் தான் எப்போதும் நீதிபதிகள். மக்கள் என்ன முடிவு செய்தாலும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அடுத்த தலைமுறை எங்களுக்கு ஒரு சரியான தலைவர் வேண்டும் என்று முடிவெடுக்கும் போது, அதனை தவறு என்று கூறுவதற்கு நீங்கள் யார். மக்களுக்கு அறியாமை உள்ளவரை அரசியல்வாதிகளும் சினிமா துறையினரும் பிழைத்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார். (a)

