Last Updated:
சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் விரைவில் புதிய முதலமைச்சர் ஆட்சி அமைப்பார் எனவும் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து சித்தராமையா விலகியுள்ளார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இல்லாததால், ஆளுநர் மாளிகையில் அவரது சிறப்புச் செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சித்தராமையா வழங்கினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த நிலையில், முதலமைச்சராக சித்தாரமையா பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் பதவியை சித்தராமையாவும், டி.கே. சிவக்குமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் சமமாக பிரித்துக் கொள்வது என ஒப்புக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.
இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டிகே சிவக்குமார் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க் கொடி தூக்கினர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் சித்தராமையா இன்று காலை விருந்து அளித்தார். அப்போது, சித்தராமையாவின் காலில் விழுந்து டி.கே.சிவக்குமார் ஆசி பெற்றார்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோருடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்த சித்தராமையா, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் சிறப்புச் செயலாளர் பிரபு சங்கரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, காங்கிரஸ் தலைமை கூறியதை அடுத்து ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாக தெரிவித்தார். ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வார் என நம்புவதாகவும் அவர் கூறினார். சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் விரைவில் புதிய முதலமைச்சர் ஆட்சி அமைப்பார் எனவும் சித்தராமையா தெரிவித்தார்.

