அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போன்றே விசித்திரமான தோற்றமளித்த அல்பினோ ( வெளிறிய நிற) வகை எருமை மாடு ஒன்று, வங்காளதேச அரசின் தலையீட்டால் ஈகைத் திருநாள் (பக்ரீத்) பலியிடுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
இறைவனுக்காகத் தன் மகனையே பலியிடத் துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ஈத் அல்-அதா அன்று, சடங்கு ரீதியாகப் பலியிடுவதற்காக 1,500 பவுண்டுகளுக்கும் (சுமார் 680 கிலோ) அதிக எடையுள்ள இந்த எருமை மாடு விற்கப்பட்டிருந்தது.
ஆனால், அதன் தலையில் டொனால்ட் டிரம்ப் பாணியில் இருந்த தனித்துவமான பொன்னிற முடிச்சுருள் காரணமாகச் சமூக ஊடகங்களில் அந்த எருமை மாடு மிகவும் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் ஏற்பட்ட பெரும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, அரசு அதிகாரிகள் தலையிட்டு அதன் பலியிடுதலைத் தடுத்து நிறுத்தினர்.

இந்த அரிய வகை அல்பினோ எருமையின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியதால், அது வைக்கப்பட்டிருந்த நாராயணகஞ்ச் (Narayanganj) நகருக்கு அருகிலுள்ள பண்ணையில் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரளத் தொடங்கினர்.
அங்கு வந்திருந்த ரசிகர் ஒருவர் தன் குடும்பத்தினருடன் கூறுகையில், “உண்மையிலேயே, இந்த எருமை மாட்டிற்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையே நிறைய முக ஒற்றுமைகள் உள்ளன. என் மருமகன் இந்த ‘டொனால்ட் டிரம்ப்’ எருமையைப் பார்ப்பதற்காகவே ஒரு மணி நேரம் படகில் பயணம் செய்து வந்துள்ளான்,” என்றார்.
இந்தப் பண்டிகையின் ஒரு பகுதியாகச் சுமார் 12 மில்லியன் கால்நடைகளுடன் இந்த எருமை மாடும் பலியிடப்படவிருந்தது. இந்த எருமையைப் பராமரித்து வந்த 38 வயதான விவசாயி ஜியா உதின் மிருதா (Zia Uddin Mridha) கூறுகையில், “நான் ‘டொனால்ட் டிரம்ப்’ எருமையை மிகவும் மிஸ் செய்வேன்; ஆனால், பலியிடுவது என்பது பண்டிகையின் முக்கியக் கடமையாகும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அரசின் அதிரடி உத்தரவு:
சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த வங்காளதேச உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது (Salahuddin Ahmed), அந்த எருமை மாட்டைப் பலியிடுவதிலிருந்து விலக்கு அளித்து, அதனைத் தலைநகர் டாக்காவில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவிற்கு மாற்றுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், அந்த எருமையை வாங்கியவருக்கு உரியப் பணம் திருப்பித் தரப்பட்டது.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட அசாதாரணக் ஆர்வம் காரணமாக, கடைசி நிமிடத்தில் அந்த எருமை மாட்டைப் பலியிடுவதிலிருந்து விலக்களிக்க முடிவு செய்யப்பட்டது,” என்றார்.
விவசாயி மிருதா கூறுகையில், இந்த எருமையின் உருவ ஒற்றுமையைப் பார்த்துவிட்டுத் தனது தம்பிதான் இதற்கு ‘டொனால்ட் டிரம்ப்’ என்று பெயரிட்டதாகக் கூறினார். நான்கு வயதான இந்த விலங்கு மிகவும் சாதுவானது என்றும், அடிக்கடி உணவளிப்பது மற்றும் வழக்கமான குளியல் உட்பட இதற்கு கூடுதல் பராமரிப்பு தேவைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அல்பினோ எருமை மாடுகள் மிகவும் அரிய வகையாகும். உடலில் கரும் நிறத்திற்கு காரணமான ‘மெலனின்’ என்ற நிறமி மரபணு ரீதியாக இல்லாததால், இவை வெளிறிய தோற்றத்தைக் கொண்டுள்ளன. சூரிய ஒளி இவற்றுக்குக் ஒவ்வாமையை ஏற்படுத்துவதால், இவற்றுக்குத் தனி கவனிப்பு அவசியமாகும்.
அடுத்து வந்த ‘நெதன்யாகு’:
இந்த எருமை மாட்டிற்கு “டொனால்ட் டிரம்ப்” என்று பெயரிட்டது பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பண்ணையின் ஊழியர்கள் மற்றொரு அல்பினோ எருமை மாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) பெயரைச் சூட்டியுள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின்படி, அதன் ‘ஆக்ரோஷமான’ அணுகுமுறை, பொன்னிற வெள்ளை முடி மற்றும் கண் நிறம் ஆகியவை இஸ்ரேல் பிரதமரை ஒத்திருப்பதாகப் பண்ணை ஊழியர்கள் தெரிவித்தனர். “நெதன்யாகு மிகவும் குறும்புக்காரன் மற்றும் தந்திரமான புத்திசாலித்தனம் கொண்டவன். நாங்கள் அதற்கு உணவளிக்கச் சென்றால் கூட, அது மூச்சிரைத்து எங்களை முட்ட வருகிறது,” என்று பண்ண மேலாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இஸ்லாமியர்களின் முக்கிய இரு பண்டிகைகளில் ஈத் அல்-அதா (பக்ரீத்) இரண்டாவதாகும். புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஈத் அல்-பித்ர் (ரம்ஜான்) முதலாவது பண்டிகையாகும். இந்தத் தியாகத் திருநாளில் ஒட்டகம், ஆடு, மாடு அல்லது செம்மறியாடு போன்ற கால்நடைகளைப் பலியிடுவது மரபாகும். பலியிடுதலுக்குக் கருதப்படும் விலங்குகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் மற்றும் தரக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பது விதியாகும்.

