Last Updated:
சூர்யவன்ஷியை வீழ்த்த கம்மின்ஸ் அமைத்துள்ள இந்த வியூகங்களை உடைத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெறுமா என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இதில் ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் ராஜஸ்தானின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சூர்யவன்ஷியை ஆட்டமிழக்க செய்ய 3 ப்ளான்களை ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்புத் தொடரின் லீக் சுற்றில் ராஜஸ்தான் அணியை இரண்டு முறை வீழ்த்தியிருக்கும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையுடன் குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேற தீவிரமாக உள்ளது. இருப்பினும், ஹைதராபாத் அணியின் இந்த வெற்றிப் பயணத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் அசுர பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி திகழ்கிறார்.
நடப்பு சீசனில் சூர்யவன்ஷிக்கு எதிராக ஹைதராபாத் அணி கலவையான முடிவுகளையே சந்தித்துள்ளது. முதல் போட்டியில் அவரை மிகக் குறைந்த ரன்களில் சுருட்டிய போதிலும், இரண்டாவது போட்டியில் சூர்யவன்ஷி ஹைதராபாத் பந்துவீச்சை துவம்சம் செய்து அதிவேக சதம் விளாசி மிரட்டினார்.
இந்நிலையில், இன்றைய வாழ்வா-சாவா நாக்-அவுட் போட்டிக்கு முன்னதாக ‘ஜியோஸ்டார்’ (JioStar) ஊடகத்திற்குப் பேட்டியளித்த ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், சூர்யவன்ஷி போன்ற அதிரடி ஆட்டக்காரரை வீழ்த்த தங்களது வழக்கமான ‘பிளான் ஏ’ மட்டும் போதாது என்றும், அவருக்காக பிரத்யேகமாக ‘பிளான் பி’ மற்றும் ‘பிளான் சி’ என மூன்று விதமான வியூகங்களை வகுத்துள்ளதாகவும் ஓப்பனாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கம்மின்ஸ் பேசுகையில், “ஒரு பந்துவீச்சாளராக நமது பலத்திற்கு ஏற்ப பந்துவீசுவது முக்கியம் என்றாலும், எதிரணியில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் இருக்கும்போது, அவர்களுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கி மாற்று வியூகங்களை தயார் செய்ய வேண்டியது அவசியமாகிறது. கடந்த போட்டியில் சூர்யவன்ஷி எங்களுக்கு எதிராக சதம் அடித்திருந்தாலும், சில ஓவர்களில் அவரை ரன் அடிக்க விடாமல் நாங்கள் சிறப்பாகக் கட்டுப்படுத்தினோம். சில நேரங்களில் அவர் எங்கள் கையை மீறிச் சென்றார். அந்த தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொண்டுள்ளோம், எனவே இந்த போட்டியில் அவருக்கென தனித் திட்டங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், லீக் சுற்றில் ராஜஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற இரண்டு வெற்றிகள் இன்றைய போட்டிக்கு சாதகமாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த கம்மின்ஸ், “ஒவ்வொரு புதிய போட்டியும் பூஜ்ஜியத்தில் இருந்துதான் தொடங்குகிறது. இருப்பினும் முந்தைய போட்டிகளின் அனுபவங்கள் நிச்சயம் உதவும். அவர்களின் பெரும்பாலான வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்துள்ளோம்.
ஏற்கனவே வெற்றி பெற்ற நினைவுகளுடன் களமிறங்குவது மனரீதியாக அணிக்கு நல்ல உத்வேகத்தைக் கொடுக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். சூர்யவன்ஷியை வீழ்த்த கம்மின்ஸ் அமைத்துள்ள இந்த வியூகங்களை உடைத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெறுமா என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


