Last Updated:
வெள்ளியன்று நடைபெறும் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் அல்லது ஐதராபாத் அணியுடன் குஜராத் அணி மோதுகிறது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் 1 போட்டியில் ஆர்சிபி அணியிடம் குஜராத் அணி படுதோல்வியடைந்தது. இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது குஜராத் அணியின் கிளென் பிலிப்ஸ் டென்ஷனாக பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. பெரும் சவாலான இந்த இலக்கைத் துரத்திய குஜராத் அணி 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தத் தோல்விக்குப் பிறகு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், குஜராத் அணியின் ஆடும் லெவனில் இடம் பெறாத கிளென் பிலிப்ஸ் செய்தியாளர்களைச் சந்திக்க வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அப்போது நிருபர் ஒருவர், “ஆர்சிபி அணி 254 ரன்கள் குவித்த உடனே குஜராத் அணி மனரீதியாக தோல்வியை ஒப்புக்கொண்டு, போட்டியை அப்படியே கைவிட்டுவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார். இக்கேள்வியால் அதிர்ச்சியடைந்த கிளென் பிலிப்ஸ், அந்த நிருபரை நோக்கி காட்டமாகப் பதிலளித்தார்.
இதுகுறித்து பிலிப்ஸ் பேசுகையில், “அது மிகவும் முட்டாள்தனமான மற்றும் மோசமான கேள்வி. எந்தவொரு தொழில்முறை கிரிக்கெட் வீரரும் மைதானத்திற்குள் செல்லும்போதே, ‘நாம் இந்தப் போட்டியை அப்படியே கைவிட்டுவிடலாம்’ என்ற எண்ணத்தோடு செல்ல மாட்டார்கள். நாங்கள் மைதானத்தில் எங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்திப் போராடினோம்.
துரதிர்ஷ்டவசமாக 250-க்கும் மேற்பட்ட ரன்களைத் துரத்தும்போது அனைத்தும் சாதகமாக அமைய வேண்டும். நாங்கள் அதைச் செய்யவே முயற்சி செய்தோம், ஆனால் அது இன்று நடக்கவில்லை” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும் சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் ஆகிய முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் ஏற்பட்ட ரன் குவிக்கும் அழுத்தமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
போட்டியில் விளையாடாத நீங்கள் செய்தியாளர்களைச் சந்திப்பது விசித்திரமாக இல்லையா என்று கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு, “அதில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள அனைவரும் ஒரு அணியாகவே இருக்கிறோம்.
வெளியில் இருந்து ஆட்டத்தைக் கவனித்த ஒருவரின் கருத்து, அடுத்த நாக்-அவுட் போட்டிக்குத் தயாராகும் வீரர்களுக்கு மனரீதியாக உதவக்கூடும். எங்கள் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறுவது போல, அடுத்த போட்டிக்குத் தயாராவதே இப்போதைய முக்கிய குறிக்கோள்” என்று பிலிப்ஸ் பதிலளித்தார். தோல்வியடைந்தாலும் குஜராத் அணி அடுத்த வாய்ப்பான குவாலிபையர் 2 போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளியன்று நடைபெறும் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் அல்லது ஐதராபாத் அணியுடன் குஜராத் அணி மோதுகிறது.


