சென்னை,
2026 பிபா உலகக் கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அந்த அணியின் கேப்டனும், உலக கால்பந்து உலகின் ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது தற்போதைய கிளப் அணியான இன்டர் மியாமி அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேஜர் லீக் சாக்கர் போட்டியில் பிலடெல்பியா யூனியன் அணிக்கு எதிராக இன்டர் மியாமி விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி இரண்டு கோல் அசிஸ்ட்களை வழங்கி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். ஆனால், போட்டியின் 73-வது நிமிடத்தில் திடீரென தனது இடது தொடையின் பின்பகுதியைப் பிடித்தபடி அசௌகரியத்தை வெளிப்படுத்திய அவர், உடனடியாகத் தனக்கு பதிலாக மாற்று வீரரைக் களம் இறக்கக் கோரி மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அடுத்த நாளான திங்கட்கிழமை மெஸ்ஸிக்கு நடத்தப்பட்ட தீவிர மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், அவரது இடது தொடைப் பகுதியில் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக கடுமையான தசைப்பிடிப்பு மற்றும் சோர்வு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாகப் பெரிய அளவிலான தசை நார் கிழிவுபோன்ற ஆபத்தான காயங்கள் தவிர்க்கப்பட்டாலும், இது உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் ஏற்பட்டுள்ளதால் அர்ஜென்டினா கால்பந்து நிர்வாகம் கவலையடைந்துள்ளது.
மெஸ்ஸி எப்போது மீண்டும் முழு உடற்தகுதியுடன் பயிற்சிக்குத் திரும்புவார் என்பதற்கான தெளிவான காலக்கெடுவை இன்டர் மியாமி கிளப் இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் ஜூன் மாதம் தொடங்க உள்ள உலகக் கோப்பையில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஜூன் 11 அன்று தொடங்கவிருக்கும் 2026 உலகக் கோப்பையில், அர்ஜென்டினா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 16-ல் அல்ஜீரியாவை எதிர்கொள்கிறது. தனது 6-வது உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்று புதிய வரலாற்று சாதனை படைக்கக் காத்திருக்கும் 38 வயதான மெஸ்ஸிக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தசை சோர்வு, அர்ஜென்டினா ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.




