தேர்தல்களை நடத்துவது குறித்த முடிவுகளைப் நாடாளுமன்றமும் தேர்தல் ஆணைக்குழுவுமே எடுக்க வேண்டுமே தவிர, ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பதை எவ்வாறு அறிவிக்க முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
பானந்துரையில் நேற்று (24) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வெளியிட்டிருந்த கருத்துக்களை பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்திருந்தார்.
சட்டபூர்வ அதிகாரம்
நாடாளுமன்றமும் தேர்தல் ஆணையாளருமே தேர்தல் குறித்து தீர்மானிக்க வேண்டும் என்றும், நாடு முழுவதும் சுற்றித்திரியும் ஒரு கட்சிச் செயலாளரால் தேர்தலைத் தீர்மானிக்க முடியாது என்றும் குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டில் தேர்தல் நடக்குமா இல்லையா என்று அறிவிக்க அத்தகைய செயலாளர்களுக்கு எந்தவொரு சட்டபூர்வ அதிகாரமும் இல்லை எனவும், அனைத்து முடிவுகளும் அரசியலமைப்பு நிறுவனங்கள் மூலமாகவே எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய சூழலில் வரவிருக்கும் தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லாத போதிலும், பொதுஜன பெரமுனவின் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் தொடர்ந்து கலந்துகொள்வது தற்போதைய அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தியையும், தங்கள் கட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொண்டு அடிமட்ட அளவில் கட்சி இன்னும் பலமாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிர்வாகத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகத் தங்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொய்யான வாக்குறுதிகள்
அத்துடன், இளைஞர்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகக் குற்றம் சாட்டிய அவர், அந்நியச் செலாவணி வரவு, வாகனச் சலுகைகள், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை மண்டலங்களை உருவாக்குதல் போன்ற வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் எதுவும் இல்லை என விமர்சித்த நாமல் ராஜபக்ச, நாட்டின் பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அடைவது குறித்து அரசாங்கத்தின் அமைச்சர்களே பரஸ்பர முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

