Last Updated:
Clay Pot| மண்பானையில் தயாரிக்கப்பட்ட வாட்டர் பாட்டில், டம்ளர், குளிர்பானக் கப் உள்ளிட்ட பொருட்களும் ரூ.200 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இயற்கையாக தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்கும் மண்பானைகளின் விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரை வில்லாபுரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பானை விற்பனை செய்து வரும் வியாபாரிகள், இந்த கோடைக்காலத்திலும் பல்வேறு புதிய வடிவமைப்புகளுடன் மண்பானைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
மின்சார செலவு இல்லாமல் தண்ணீரை இயற்கையாக குளிர்ச்சியாக வைத்திருக்கும் மண்பானைகளை மக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதில் குழாய் பொருத்தப்பட்ட மண்பானைகளுக்கு பெண்கள் மற்றும் குடும்பத்தினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீளமான டியூப் வடிவ மண்பானைகள் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல், ஜாடி வடிவிலான குழாய் பொருத்தப்பட்ட மண்பானைகள் ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமல்லாமல், குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட அலங்கார குழாய் மண்பானைகளும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. பெரிய அளவிலான இந்த மண்பானைகள் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், மண்பானையில் தயாரிக்கப்பட்ட வாட்டர் பாட்டில், டம்ளர், குளிர்பானக் கப் உள்ளிட்ட பொருட்களும் ரூ.200 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சமையலுக்கான கருப்பு மீன் குழம்பு சட்டி, இருமுறை சுடப்பட்ட மண் சட்டி, சாதாரண மண்சட்டி உள்ளிட்ட பாரம்பரிய சமையல் பாத்திரங்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மண்சட்டியில் சமைக்கும் உணவிற்கு தனித்துவமான சுவையும் ஆரோக்கிய நன்மைகளும் இருப்பதாக கூறி மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை சற்று குறைவாக இருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Clay Pot: மதுரைக்காரர்களை கவரும் குஜராத் டிசைன்… கிராக்கியில் வண்ணம் தீட்டிய அலங்கார மண்பானைகள்…

