ஒவ்வொரு நாளும் சிறப்பாகத் தொடங்க நமக்கு ஒரு மோட்டிவேஷன் தேவைப்படுகிறது. உலகமே எதிர்த்து நின்றாலும், “நான் செய்வது சரி, என் உரிமைக்காக நான் நிற்பேன்” என்று நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தைரியம் அந்த நாளுக்கான எனர்ஜியைத் தரும். அப்படிப்பட்ட ஒரு நிஜக் கதாநாயகியின் கதைதான் இது.
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் சிவில் உரிமைப் போராட்டத்தின் தாய் என்று `ரோசா பார்க்ஸ்” (Rosa Parks) அறியப்படுகிறார். ஆனால், அவருக்கு 9 மாதங்களுக்கு முன்பாகவே, அதே பேருந்தில், அதே போன்றதொரு அடக்குமுறையை எதிர்த்து, ஒரு 15 வயது சிறுமியின் தீப்பொறிதான் அந்த மாபெரும் வரலாற்றுக்குத் தொடக்கப்புள்ளி. அந்தச் சிறுமியின் பெயர்தான் க்ளாடெட் கோல்வின் (Claudette Colvin).

க்ளாடெட் கோல்வின் செப்டம்பர் 5, 1939 அன்று அலபாமா மாகாணத்தில் உள்ள மாண்ட்கோமரி நகரில் பிறந்தார். கறுப்பின மக்களுக்கு எதிரான நிறவெறியும், இனப்பாகுபாடும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது.
இவரது பெற்றோர் மேரி ஜேன் காட்ஸன், சி.பி. ஆஸ்டின். வறுமையின் காரணமாக இவர் தனது தாத்தா-பாட்டி உறவினர் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.
`புக்கர் டி. வாஷிங்டன்’ உயர்நிலைப் பள்ளியில் பயின்ற அவர், மிகச் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார். கறுப்பின மக்களின் வரலாற்றை, குறிப்பாக ஹாரியட் டப்மேன், சோஜர்னர் ட்ரூத் போன்ற சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளின் வீரதீரச் செயல்களைப் பற்றி பள்ளியில் ஆழமாகப் படித்து, தனக்குள்ளும் ஒரு உரிமைத் தீயை வளர்த்துக் கொண்டிருந்தார்.

