ஈரான் தன்னிடம் இருக்கும் செறியூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்கவில்லையெனில் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்கா தொடர்ந்து மிரட்டிக்கொண்டே இருந்தது. தற்போது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பெரும்பாலும் பேச்சுவார்த்தை மூலம் இறுதி செய்யப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் வடிவம் பெற்று வருவதாகவும், அதன் இறுதி விவரங்கள் இன்னும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட திட்டத்தின் படி மூன்று கட்டங்களாக அத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதன் படி போரை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வருவது, ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு காண்பது மற்றும் இரு தரப்பு நிரந்தர ஒப்பந்தத்திற்கு 30 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உருவாகிவரும் ஒப்பந்தமானது 60 நாட்கள் போர்நிறுத்த நீட்டிப்பை உள்ளடக்கியிருக்கக்கூடும் என்றும், இதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும்.
ஈரான் தனது எண்ணெயை தடையின்றி விற்கும் திறனை மீண்டும் பெறும். மேலும் அதன் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. இரு நாடுகளிடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதை இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ உறுதிப்படுத்தி இருக்கிறார்.

