சென்னை:
சென்னையிலிருந்து கோல்கத்தா புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, பயணிகள் சுமார் 12 மணி நேரம் கடுமையான அவதிக்குள்ளாகினர்.
வெள்ளிக்கிழமை (மே 22) இரவு 7.40 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம், தாமதமாகப் புறப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், இரவு 10.15 மணியளவில் விமானம் ஓடுபாதையில் (Runway) சென்றுகொண்டிருந்தபோது, அதில் இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, பொறியாளர்கள் மூலம் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பணிகள் முடிந்து இரவு 11.50 மணியளவில் விமானம் மீண்டும் புறப்பட்டு ஓடுபாதையில் நகரத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மீண்டும் ஒரு கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் விமானி அவசரமாக விமானத்தை நிறுத்தினார்.
விமானம் எப்போது புறப்படும் என்பதில் தொடர்ந்து நீடித்த இழுபறி காரணமாக, அதிலிருந்த 180 பயணிகளும் 7 ஊழியர்களும் நள்ளிரவில் அவசரமாக இறக்கிவிடப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் சிலர் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினர்; சிலர் மாற்றுத் தேதிக்கு பயணத்தை மாற்றிக் கொண்டனர். எஞ்சிய பயணிகளை சனிக்கிழமை காலை அதே விமானத்தில் அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கிடையில், சனிக்கிழமை காலை சென்னை விமான நிலையப் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் விமானச் சேவைகள் மேலும் பாதிக்கப்பட்டன.
திருப்பதிக்குத் திருப்பிவிடப்பட்ட விமானம்: ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் பலத்த காற்றால் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்குத் திருப்பிவிடப்பட்டது. துபாய் மற்றும் அபுதாபியிலிருந்து வந்த விமானங்களும் தாமதமாகவே தரையிறங்கின.
புறப்பாட்டில் தாமதம்: டெல்லி, கோல்கத்தா, பெங்களூரு, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் கடுமையான சூறைக்காற்று காரணமாகத் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுடன் (Passport) வந்த 15 பேரின் விரல்களில் அழியா மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




