சமூக ஊடகங்களில் இயங்கும் இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் விமர்சித்திருந்தார். “கரப்பான் பூச்சிகளைப் போன்ற சில இளைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு எவ்வித வேலைவாய்ப்பும் கிடைப்பதில்லை. இத்தொழில் துறையிலும் இவர்களுக்கு எவ்வித இடமும் இல்லை. இவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சிலர் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களாகவும், சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) ஆர்வலர்களாகவும், மற்றும் சிலர் பிற செயற்பாட்டாளர்களாகவும் மாறி, அனைவர் மீதும் தாக்குதல் தொடுக்கத் தொடங்குகின்றனர்” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடந்த 15ஆம் தேதி ஒரு வழக்கு விசாரணையில் தெரிவித்தார். பின்னர் தனது கருத்து குறித்து விளக்கம் அளித்த நீதிபதி சூரியகாந்த், போலியான பட்டப் படிப்புகளைப் பெறுபவர்களைக் குறிப்பிட்டே தாம் அவ்வாறு பேசியதாகவும், இந்தியாவின் இளைஞர்களைக் காயப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் கூறினார். மேலும், இந்திய இளைஞர்களே ‘வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூண்கள்’ என்றும் தெரிவித்தார்.


