இஸ்ரேலின் சட்டவிரோதக் குடியேற்றப் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் விற்கப்படும் பொருட்களுக்குத் தடை விதிப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு நெதர்லாந்து நாடாளுமன்றத்தின் கீழ் அவை ஆதரவு அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஸ்ஜூர்ட் ஸ்ஜூர்ட்ஸ்மா (Sjoerd Sjoerdsma) இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சட்டவிரோதக் குடியேற்றங்கள்
அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்த நடவடிக்கை மூலம் நெதர்லாந்து அமைச்சரவை இஸ்ரேலுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது.

இத்தகைய சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தொடர்ந்து பராமரிப்பதற்கோ அல்லது ஊக்குவிப்பதற்கோ நெதர்லாந்து பங்களிக்க விரும்பவில்லை.
இஸ்ரேல் பலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளமை குறித்து கடந்த 2024ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் (ICJ) வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியக் குடியேற்றங்கள்
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்றும் மேற்குக்கரை (West Bank) பகுதியின் பெரும்பகுதிகள் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டிருப்பது சர்வதேச விதிகளுக்கு முரணானது என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குடியேற்றத் திட்டங்களுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் மற்ற ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
நெதர்லாந்து அமைச்சரவையின் அறிக்கையின்படி இந்தத் தடையானது சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றிய ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் (Golan Heights) உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

