Last Updated:
சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்டு முகத்தில் 20 ஆயிரம் தேனீக்களை தாடிபோல் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவி.
கோவையில் சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது முகத்தில் ஆயிரக்கணக்கான தேனீக்களை தாடி போன்ற வடிவில் அமைத்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவி பாக்கியலட்சுமி, சர்வதேச தேனீக்கள் தினத்தை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு நிகழ்வை மேற்கொண்டார். தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் பெண்களும் எளிதாக தேனீக்களை கையாள முடியும் என்பதை எடுத்துக்கூறும் வகையில் இந்த முயற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சுமார் 20 ஆயிரம் தேனீக்கள் அவரது முகத்தில் தாடி போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. எந்தவித அச்சமுமின்றி அமைதியாக தேனீக்களை கையாள்ந்த மாணவி பாக்கியலட்சுமியின் செயல் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தேனீ வளர்ப்பு என்பது நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாகும். பெண்களும் தைரியமாக தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம் என்பதை சமூகத்திற்கு எடுத்துரைப்பதற்காக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினேன்” என்றார்.
இந்த நிகழ்வு சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது. தேனீக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், மகரந்தச் சேர்க்கையிலும் முக்கிய பங்கு வகிப்பதால், அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் இந்த நிகழ்வு பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

