பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம், கல்முனை தலைமையகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெலிகொம் பகுதிக்கு அருகில், புதன்கிழமை (20) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போதே, குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
50 வயது மதிக்கத்தக்க இச்சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 130 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரிடமிருந்த பணப்பை, ஒரு தொகை பணம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் உத்தியோகத்தராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதும், இலங்கை பொலிஸ் சேவையிலிருந்து விலகும்போது அவர் ஒரு பொலிஸ் சார்ஜன்ட்டாக கடமையாற்றியுள்ளார் என்பதும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், இச்சந்தேக நபர் அண்மைக்காலமாக அப்பகுதி இளைஞர்களுக்கு இரகசியமான முறையில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட புலனாய்வுப்பிரிவு மற்றும் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமையவே, கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சியின் வழிகாட்டலில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (சட்டத்தரணி) வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் நெறிப்படுத்தலில், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் வழிகாட்டலின் கீழ் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான, உப பொலிஸ் பரிசோதகர் சூரியகுமார மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜவாத், இஸ்மத், மனோஜ் உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
இவ்விடயம் குறித்து கல்முனை தலைமையகப் பொலிஸார் மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.




