இலங்கை நாணயச் சந்தையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்றும் (செவ்வாய்க்கிழமை) பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளதுடன், டொலரின் விற்பனை விலை 338 ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (19) வெளியிட்டுள்ள நாளாந்த உத்தியோகப்பூர்வ நாணய மாற்று வீத அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை (Buying Rate) 328.2351 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. அதேவேளை, அதன் விற்பனை விலை (Selling Rate) 338.0729 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.
இதற்கு முன்னைய நாளான திங்கட்கிழமை (18) மத்திய வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.74 ரூபாயாகவும், விற்பனை விலை 334.26 ரூபாயாகவும் காணப்பட்டது.
இதன்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று ஒரே நாளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலையானது சுமார் 3.81 ரூபாயால் திடீரென அதிரடியாக அதிகரித்துள்ளது. நாளாந்தம் டொலரின் மதிப்பு இவ்வாறு அசுர வேகத்தில் அதிகரித்து வருவதனால், வரும் நாட்களில் இறக்குமதிப் பொருட்களின் விலைகள் மேலும் உயரும் எனப் பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

