ஈரானின் திட்டம் என்ன?
ஹார்முஸ் நீரிணை கடற்பகுதிக்கு அடியில் செல்லும் சர்வதேச இணைய கேபிள்களைப் பயன்படுத்துவதற்கு, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரான் திட்டமிட்டு வருகிறது. இதனை ஈரானிய ராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபகாரி (Ebrahim Zolfaghari) தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த புதிய விதிகளின்படி கூகுள் (Google), மைக்ரோசாஃப்ட் (Microsoft), மெட்டா (Meta) மற்றும் அமேசான் (Amazon) போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈரானிய சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, உரிமக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.
அப்படி இந்த கடலடி கேபிள்களில் என்ன இருக்கிறது? ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது?
சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரவுகளின்படி, உலகளாவிய இணைய போக்குவரத்தில் 99% இந்த கடலடி Fiber-optic கேபிள்கள் மூலமே நடக்கிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளான UAE, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகியவற்றை இணைக்கும் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் தரவுப் பரிமாற்றங்கள் இதன் வழியேதான் செல்கின்றன. இந்த கேபிள்கள் வழியாக தினமும் சுமார் 10 டிரில்லியன் டாலர் மதிப்பிலான நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் தரவுகள் கடந்து செல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையின் கடல் படுகையில் பல முக்கிய சர்வதேச கேபிள் அமைப்புகள் இயங்கி வருகின்றன. அதில் Asia-Africa-Europe 1 தென்கிழக்கு ஆசியாவை எகிப்து வழியாக ஐரோப்பாவுடன் இணைக்கும் மிக நீண்ட கேபிள் அமைப்பு. உலகளாவிய டிஜிட்டல் உள்கட்டமைப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு மாபெரும் சர்வதேச கடலடி ஃபைபர்-ஆப்டிக் கேபிள் அமைப்பு. சுமார் 25,000 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
இந்த கேபிள் Consortium 2014-ல் கையெழுத்தாகி, 2017 ஜூன் முதல் வணிகரீதியான சேவைக்கு வந்தது. Asia-Africa-Europe 1 கேபிள் ஹாங்காங்கில் தொடங்கி, தென்கிழக்கு ஆசியா, இந்தியப் பெருங்கடல், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் செங்கடல் வழியாக எகிப்தைக் கடந்து ஐரோப்பாவை அடைகிறது. 19 நாடுகளை இணைத்து, மொத்தம் 21 தரையிறங்கும் புள்ளிகளைக் கொண்டுள்ளது.
இந்த கேபிள் சிங்கப்பூரில் முடிவடைவதோடு மட்டுமல்லாமல், தாய்லாந்து நிலப்பரப்பு வழியாக ஹாங்காங், வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளை நேரடியாக இணைக்கிறது. மலாக்கா நீரிணையின் போக்குவரத்து நெரிசலான கடல் பகுதியைத் தவிர்ப்பதால், ஹாங்காங், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா இடையே தரவுப் பரிமாற்ற தாமதம் மிக மிகக் குறைவு. ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான சர்வதேச கிளவுட் சேவைகள், 5G நெட்வொர்க்குகள், AI உள்கட்டமைப்புகள் மற்றும் அதிவேக இணையப் போக்குவரத்திற்கு இது ஒரு முக்கிய முதுகெலும்பாக உள்ளது. இந்த கேபிள் ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா பகுதி வழியாகச் செல்வதால், தற்போதைய அமெரிக்கா-ஈரான் மோதல் சூழலில் இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஒரு இலக்காக மாறியுள்ளது.
ஈரான் போட்டிருக்கும் முப்பரிமாண திட்டம்!
ஹார்முஸ் நீரிணைக்கு அடியில் செல்லும் மற்றொரு கேபிள் நெட்வொர்க் FALCON. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை வளைகுடா நாடுகள், சூடான் மற்றும் எகிப்துடன் இணைக்கும் முக்கிய நெட்வொர்க். சுமார் 11,500 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கேபிள், பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் ஒரு தனித்துவமான Loop configuration உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேபிள் அமைப்பு Global Cloud Xchange நிறுவனத்திற்குச் சொந்தமானது. FALCON கேபிள் அமைப்பு எகிப்தில் தொடங்கி, செங்கடல் வழியாக வந்து, ஓமனில் இரண்டாகப் பிரிந்து ஒன்று இந்தியாவையும், மற்றொன்று வளைகுடா நாடுகளையும் இணைக்கிறது. ஈராக் நாட்டிற்கு நேரடி சர்வதேச கடலடி கேபிள் இணைப்பை வழங்கிய முதல் முக்கிய நெட்வொர்க்குகளில் FALCON மிக முக்கியமானது.

இதேப்போல் Gulf Bridge International, Tata Communications Gulf Cable System ஆகிய நெட்வெர்க்குகளும் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்கின்றன. ஈரானின் புரட்சிகர காவல் படை, இந்த கேபிள்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முப்பரிமாண திட்டத்தை முன்வைத்துள்ளன.
ஈரான் சட்ட வரம்புக்குள் அமெரிக்க நிறுவனங்களை கொண்டு வர முயற்சி?
கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் போன்ற உலகளாவிய டெக் நிறுவனங்கள் தங்களின் தரவுகள் இந்த நீரிணை வழியே செல்வதற்கு ஆண்டுதோறும் உரிமக் கட்டணம் அல்லது ‘டிஜிட்டல் சுங்கக் கட்டணம்’ செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆண்டுக்கு 15 பில்லியன் டாலர் வரை வருவாய் ஈட்ட ஈரான் திட்டமிடுகிறது. இந்த கேபிள்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் ஈரானிய சட்ட வரம்புகளுக்குள் இயங்க வேண்டும்.
கடலுக்கடியில் ஏற்படும் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை பிராந்தியத்தின் தற்போதைய நிறுவனங்களுக்குப் பதிலாக, பிரத்தியேகமாக ஈரானிய நிறுவனங்களுக்கே வழங்க வேண்டும். அதேநேரம் கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் ஈரானுக்குப் பணம் செலுத்த அமெரிக்கச் சட்டங்கள் தடை விதிக்கின்றன. எனவே, ஈரான் கட்டணம் கோரினாலும் இந்த நிறுவனங்களால் சட்டப்பூர்வமாகப் பணம் செலுத்த முடியாது. இது ஒரு முட்டுக்கட்டையை உருவாக்கும்.
ஹார்முஸ் நீரிணையின் மிகக் குறுகிய பகுதி வெறும் 21 கடல் மைல் அகலமே கொண்டது. இதனால் ஈரானின் 12 மைல் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியும், ஓமனின் கடல் பகுதியும் முழுமையாக ஒன்றோடொன்று இணைகின்றன.
சர்வதேச சட்டங்களின்படி இது, Strait for International Navigation என்று அழைக்கப்பட்டாலும், இந்த கேபிள்கள் தங்கள் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் படுகையில் அமைந்திருப்பதாக ஈரான் கூறுகிறது. United Nations Convention on the Law of the Sea சட்டத்தின் பிரிவு 79-ஐ சுட்டிக்காட்டி ஈரான், தனக்கு கட்டணம் வசூலிக்க உரிமை உள்ளதாக கூறியுள்ளது.
எதிர்க்கும் அமெரிக்கா:
ஈரானின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்கா கடுமையான எதிர்வினையாற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் போக்குவரத்துக்கு ஈரான் அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில், இப்போது உலகளாவிய டிஜிட்டல் கட்டமைப்பை ஈரான் குறிவைப்பதை அமெரிக்கா “டிஜிட்டல் அச்சுறுத்தலாகவும்” உத்திசார்ந்த அராஜகமாகவும் பார்க்கிறது.
அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு ஈரான் விதிக்கும் கட்டணங்களை ஏற்றுக்கொள்ள கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கச் சட்டங்களின்படி, கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் ஈரானிய அரசுக்கோ அல்லது அதன் இராணுவ அமைப்புகளுக்கோ எந்தவொரு நிதியையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ செலுத்தக் கூடாது. அமெரிக்கக் கடற்படை பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் தங்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன.

ஈரானின் புரட்சிகர காவல் படை, தங்களின் மினி-நீர்முழ்கிக் கப்பல்கள் அல்லது டிரோன்கள் மூலம் இந்தக் கேபிள்களுக்கு ஏதேனும் திட்டமிட்ட சேதங்களை ஏற்படுத்த முயன்றால், அது உலகப் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு கடுமையான ராணுவ விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளன.
2008-ல் இந்தியாவிற்கு நடந்தது, இப்போது உலகத்திற்கே நடக்கப்போகிறது?
ஈரான் இப்போது கேபிள்களை மிரட்டலாகப் பயன்படுத்துவதற்கு ஒரு வலுவான வரலாற்றுப் பின்னணி உள்ளது. 2008 ஆம் ஆண்டு, இதேபோல ஒரு பதற்றமான சூழலில், எகிப்து மற்றும் வளைகுடா கடற்பகுதியில் தற்செயலாக ஒரு பெரிய கப்பலின் நங்கூரம் (Anchor) இழுக்கப்பட்டதில் FALCON உட்பட 3 முக்கிய கடலடி கேபிள்கள் அடுத்தடுத்து துண்டிக்கப்பட்டன.
இதன் விளைவாக, இந்தியாவிற்கு 60% இணைய சேவை முடங்கியது. பாகிஸ்தான் மற்றும் எகிப்து நாடுகள் முற்றிலும் டிஜிட்டல் இருளில் மூழ்கின. கடலுக்கு அடியில் இருக்கும் இந்த மெல்லிய கண்ணாடி இழைகள் எவ்வளவு பலவீனமானவை, அதை வைத்து ஒட்டுமொத்த உலகையே எப்படி மிரட்டலாம் என்பதை ஈரான் இந்த சம்பவங்களின் மூலமே புரிந்துகொண்டது. சர்வதேச அரங்கில் ஈரானின் இந்த நடவடிக்கையை வல்லுநர்கள் “டிஜிட்டல் கடற்கொள்ளை” அல்லது “டிஜிட்டல் சோமாலியா” பாணி என்று வர்ணிக்கிறார்கள். சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடலில் செல்லும் கப்பல்களைக் கடத்திப் பணம் பறிப்பார்கள். ஆனால் ஈரான், நவீன தொழில்நுட்ப உலகிற்குத் தேவையான “தரவு” தங்களின் கடல் வழியே போவதைக் காட்டி, உலக பணக்கார நிறுவனங்களான கூகுள், மெட்டாவிடம் மிரட்டிப் பணம் பறிக்கப் பார்க்கிறது. இது உலக வரலாற்றிலேயே ஒரு புதிய வகையான Asymmetric Warfare.
அமெரிக்காவின் முரண்!
இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஒரு விசித்திரமான முரண்பாடு உள்ளது. ஈரானின் வாதம் தவறு என்றும், சர்வதேச கடல்சார் சட்டத்தின்படி கடலில் கேபிள் பதிக்க அனைவருக்கும் சுதந்திரம் உண்டு என்றும் அமெரிக்கா வாதிடுகிறது. ஆனால் சுவாரஸ்யம் என்னவென்றால், அமெரிக்கா இதுவரை UNCLOS உடன்படிக்கையைத் தன் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கவில்லை. ஈரானும் அதை முழுமையாக அங்கீகரிக்கவில்லை, அமெரிக்காவும் செய்யவில்லை. இப்போது இரண்டு நாடுகளுமே தாங்கள் முழுமையாக ஏற்காத ஒரு சட்டப் புத்தகத்தைக் காட்டி “நீ சொல்வது தவறு, நான் சொல்வதுதான் சரி” என்று சண்டை போட்டுக் கொள்கின்றன. ஹார்முஸ் நீரிணையின் ஆழம் மிகக் குறைவு. சராசரியாக 50 மீட்டர்தான் இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் டிரோன்கள் இந்தக் கேபிள்களுக்கு மிக அருகில் வலம் வருகின்றன.

ஈரானின் நோக்கம்தான் என்ன?
வெறும் கேபிள்களைத் துண்டிப்பது ஈரானின் நோக்கமல்ல; போர் தீவிரமடைந்தால், அமெரிக்காவின் ராணுவத் தரவுகள் மற்றும் சர்வதேச நிதிப் பரிவர்த்தனைகளை கடலுக்கு அடியிலேயே ஒட்டுக் கேட்கும் (Data Tapping) தொழில்நுட்பத்தை ஈரான் ரகசியமாகப் பரிசோதித்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கிறது. ஹார்முஸ் நீரிணைக்கு அடியில் செல்லும் Subsea Internet Cable-களுக்கு ஈரான் கட்டணம் வசூலித்தால், அது உலகளாவிய டிஜிட்டல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் ஒரு “டிஜிட்டல் பேரழிவை”உருவாக்கும் என சர்வதேச வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், இந்த வழியாகச் ஐரோப்பா-ஆசியா-மத்திய கிழக்கு இடையே 20% டிஜிட்டல் தரவுகள் கடந்து செல்கின்றன.
ஈரானின் திட்டம் வெற்றிபெற்றால், உலகம் ஸ்தம்பிக்கும்!
கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப்ட் போன்ற அமெரிக்க டெக் நிறுவனங்கள் ஈரான் கேட்கும் கட்டணத்தைச் செலுத்த மறுத்தால், ஈரான் தரவுப் போக்குவரத்தை முடக்கவோ அல்லது கேபிள்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவோ முயலும். இதனால் டெக் நிறுவனங்கள் தங்களின் தரவுகளை ஹார்முஸ் நீரிணைக்கு பதிலாக மாற்றுப் பாதைகளிலோ திருப்பிவிட வேண்டியிருக்கும். இது இணையத்தின் வேகம் மற்றும் தரவுப் பரிமாற்ற தாமதத்தை பெருமளவு அதிகரிக்கும். சர்வதேச ஆன்லைன் கேமிங், நேரடி ஒளிபரப்புகள் மற்றும் வீடியோ கால்கள் கடுமையான தடங்கல்களைச் சந்திக்கும்.
உலகளாவிய அதிவேக வர்த்தகம், சர்வதேச வங்கிப் பரிவர்த்தனை நெட்வொர்க்குகள் மற்றும் கிளவுட் பேமெண்ட்கள் அனைத்தும் இந்த ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களையே நம்பியுள்ளன. இந்த கேபிள்களின் செயல்பாட்டில் சிறு முடக்கம் ஏற்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தைகள், சர்வதேச பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஏடிஎம் (ATM) சேவைகள் பல மணிநேரம் முதல் பல நாட்களுக்கு முடங்கும் அபாயம் ஏற்படும். ஈரான் விதிக்கும் இந்த “டிஜிட்டல் சுங்கக் கட்டணம்” என்பது உலகளாவிய டெக் நிறுவனங்களுக்கு எதிர்பாராத கூடுதல் செலவாகும்.

கூகுள் ஒன் (Google One), மைக்ரோசாஃப்ட் 365, அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) போன்ற கிளவுட் சேவைகளின் பராமரிப்புச் செலவு அதிகரிப்பதால், டெக் நிறுவனங்கள் இந்த சுமையை நுகர்வோர் மீது சுமத்தக்கூடும். இதன் காரணமாக உலகளவில் இந்த டிஜிட்டல் சேவைகளுக்கான மாதாந்திர சந்தா கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது. ஈரானின் 3-அம்ச திட்டத்தின்படி, தங்களின் கடல் எல்லைக்குள் இருக்கும் கேபிள்களின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு உரிமைகளை பிரத்தியேகமாக ஈரானிய நிறுவனங்களுக்கே வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கிறது.
இதனால், சர்வதேச கேபிள் பழுதுபார்ப்பு நிறுவனங்கள் இப்பகுதிக்கு வர அனுமதி மறுக்கப்படலாம். கடலடியில் ஏதேனும் இயற்கை சீற்றங்களாலோ அல்லது கப்பல் நங்கூரங்களாலோ தற்செயலாகக் கேபிள் உடைந்தால் கூட, அதை உடனே சரிசெய்ய முடியாமல் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் தாமதமாகும். இது டிஜிட்டல் முடக்கத்தை மேலும் நீட்டிக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, FALCON மற்றும் AAE-1 ஆகிய இரண்டு கேபிள்களுமே மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களை உலகோடு இணைக்கும் முக்கிய நுழைவாயில்கள்.
இந்த கேபிள்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இந்தியாவின் உலகளாவிய ஐடி அவுட்சோர்சிங் துறை, சர்வதேச கிளவுட் சேவைகள் மற்றும் இந்தியாவின் இணைய வேகம் தற்காலிகமாகப் பெரும் சரிவைச் சந்திக்கும்.
பதிலடி கொடுக்க ஈரான் செய்யும் விஷயம்!
ஈரான் உடனான போரின் ஒரு பகுதியாக, அமெரிக்கா தனது பொருளாதாரப் பலத்தைப் பயன்படுத்தி ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியையும், துறைமுக வர்த்தகத்தையும் முடக்கியுள்ளது. இதற்கு பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்த ஈரான், Professional Traffic Mechanism ஒன்றை தயாரித்துள்ளது. இதன் மூலம், இந்த நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கவும், தங்களுக்கு எதிரான நாடுகளின் கப்பல்களுக்குப் பாதையை மூடவும் ஈரான் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் ஒரு குறிப்பிட்ட கடல் பாதையை வகுத்துள்ளது. இந்த வழியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் போன்ற “சிறப்புச் சேவைகளை” வழங்குவதாகக் கூறி, சுங்கக் கட்டணத்தை ஈரான் வசூலிக்கும். ஈரான் இந்த நீரிணையை அனைத்து நாடுகளுக்கும் முழுமையாக மூடவில்லை, ஆனால் தன் விருப்பப்படி நிபந்தனைகளை விதிக்கிறது.
ஈரானுடன் ஒத்துழைக்கும் மற்றும் நட்பு நாடுகளின் வணிகக் கப்பல்களுக்கு மட்டுமே இந்த அமைப்பின் கீழ் முன்னுரிமையும், பாதுகாப்பான பாதையும் வழங்கப்படும். அமெரிக்காவின் தலைமையிலான Project Freedom என்ற கடல்சார் பாதுகாப்பு அமைப்போடு தொடர்புடைய கப்பல்களுக்கும், ஈரானை எதிர்க்கும் நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த ஹார்முஸ் நீரிணைப் பாதை முற்றிலும் மறுக்கப்படும். இந்த புதிய போக்குவரத்து முறை தங்களின் தேசிய இறையாண்மைக்கு உட்பட்டது என்றும், சர்வதேச வர்த்தக பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இது கொண்டுவரப்படுகிறது என்றும் ஈரான் கூறுகிறது.

