இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். காயம் காரணமாக இந்த சீசன் முழுவதும் விளையாடாத எம்.எஸ். தோனி இன்றைய போட்டியிலும் களமிறங்கவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு துவக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியான துவக்கத்தை தந்தார். அவர் 13 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 27 ரன்கள் குவித்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான உர்வில் படேல் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக ஆடி 21 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இருப்பினும், மிடில் ஆர்டரில் கார்த்திக் சர்மா 19 பந்துகளில் 32 ரன்களும், டெவால்ட் பிரெவிஸ் 27 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் சிவம் துபே 26 ரன்கள் சேர்க்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணிக்கு சென்னை அணியின் பவுலர்கள் துல்லியமாக பந்துகளை வீசி கடும் நெருக்கடி கொடுத்தனர்.
டிராவிஸ் ஹெட் 6 பந்துகளில் 6 ரன்களும், அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 26 ரன்களும் சேர்த்தனர். 7.4 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணிக்கு இஷான் கிஷன், கிளாசன் இணை சிறப்பாக விளையாடி ரன்களை எடுத்துக் கொடுத்தது.
கிளாசன் 26 பந்துகளில் 2 சிக்சர் 6 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்த இஷான் கிஷன் 47 பந்துகளில் 3 சிக்சர் 7 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்.
19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ப்ளே ஆஃப் வாய்ப்பு சென்னைக்கு இன்னும் உள்ளதா?
இந்த போட்டியில் தோல்வியடைந்த நிலையில் சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளை பெற்று 6 ஆம் இடத்தில் உள்ளது. சென்னை அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. அதற்கு சென்னை அணி குஜராத்திற்கு எதிரான கடைசி போட்டியில் அதிக ரன்/விக்கெட் வித்தியாசத்தில், விரைந்து வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். இதன் அடிப்படையில் சென்னை 14 புள்ளிகளைப் பெறும்.
சென்னைக்கு போட்டி அணிகளாக இருக்கும் பஞ்சாப் தனது கடைசி போட்டியிலும், ராஜஸ்தான் அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும். இவை நடந்தால் சென்னை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை பெறும்.

