
திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்த நடிகர் விஜய், தனது கலைப்பயணத்தின் உச்சத்தில் இருந்தபோதே ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியலில் பிரவேசித்தார். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை முதன்முறையாக எதிர்கொண்ட தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
விஜய், சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு சிறந்த இயக்குநராவார்; அவரே விஜய்யைத் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டமே முதலமைச்சர் விஜய்யின் குடும்ப பூர்வீகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, முதலமைச்சர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் தாயார் திருமதி. லில்லி சேனாதிபதி, திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் பிறந்து வளர்ந்தவராம். இதன் மூலம் தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் திருநெல்வேலி மண்ணிற்கும் இடையிலான நெருங்கிய பந்தம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தத் தகவலை எஸ்.ஏ. ராஜாவின் மகன் ஜாய் ராஜா என்பவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற போது, இதுகுறித்து ‘ராஜாஸ்’ கல்விக்குழுமத்தின் தலைவரும், ‘ஜாய்’ பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் எஸ்.ஏ. ஜாய் ராஜா வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தியில்:
“வடக்கன்குளம் மண்ணில் பிறந்து, வளர்ந்து மறைந்த லில்லி சேனாதிபதியின் பேரன் ஜோசப் விஜய், தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். ‘மாற்றத்தின் நாயகனுக்கு’ எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்; அவரது மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.”
எனத் தெரிவித்திருந்தார். வடக்கன்குளம் என்பது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியமான ஊராகும். இது நெல்லை – கன்னியாகுமரி சாலையில், நெல்லை மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

