பொதுவாக ஒரு நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது சுங்கவரி உயர்த்தப்படுவது, அந்த பொருளின் இறக்குமதியை கட்டுப்படுத்தவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். அதன்படி, தங்கத்தின் மீது சுங்க வரியை உயர்த்தியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நாட்டின் நிதி பற்றாக்குறையை சமாளிப்பதும், வரி வருவாயை அதிகரிப்பதுமாகும்.
மேலும் உலகளவில் நிலவி வரும் பொருளாதார மற்றும் அரசியல் பதற்றங்களும் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக ஈரான் – இஸ்ரேல் மற்றும் ரஷ்யா – அமெரிக்கா இடையேயான மோதல்கள் உலக சந்தையில் நிலைத்தன்மையற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. இதன் காரணமாக பல நாடுகள் தங்கம் மற்றும் வெள்ளியை பாதுகாப்பான முதலீட்டு சொத்துகளாக கையிருப்பில் வைத்துக்கொள்ள தொடங்கியுள்ளன. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கத்தின் பெரும்பாலான தேவைகள் இறக்குமதியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றன. இதற்காக அமெரிக்க டாலர் அடிப்படையில் பணம் செலுத்த வேண்டியிருப்பதால், டாலரின் மதிப்பு உயர்ந்துள்ள தற்போதைய சூழலில் நாட்டின் வெளிநாட்டு செலவின அழுத்தமும் அதிகரித்துள்ளது. இதனால் தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தவும், இந்திய ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும் மத்திய அரசு இந்த சுங்கவரி உயர்வை மேற்கொண்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பொருளாதார அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் தங்கம் முதலீட்டு பொருளாக பார்க்கப்பட்டாலும், இந்தியாவில் அது குடும்ப மரபு, திருமணம், சேமிப்பு மற்றும் சமூக அந்தஸ்தின் அடையாளமாக கருதப்படுகிறது. “பிறப்பு முதல் இறப்பு வரை தங்கம் அவசியம்” என்ற மனநிலை இந்திய சமூகத்தில் ஆழமாக பதிந்துள்ளது.
இதனால் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்ற அச்சம் நடுத்தர மற்றும் குறைந்த வருமான மக்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக திருமண நகை வாங்கும் குடும்பங்கள், சிறு சேமிப்பாளர்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதேவேளை, தங்க விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. காரணம், சுங்கவரி உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவை அவர்கள் நேரடியாக நகை விலைகளில் சேர்த்து பொதுமக்களிடம் மாற்றிவிட முடியும். இதனால் இறுதியில் அதிக சுமை பொதுமக்கள் மீதே விழும் அபாயம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அதே நேரத்தில், அரசின் இந்த நடவடிக்கை முழுமையாக தவறானது அல்ல என்றாலும், 15 சதவீத உயர்வு மிகவும் அதிகமானதாக இருப்பதாக சில பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 10 சதவீத அளவில் வரியை உயர்த்தியிருக்கலாம் என்றும், ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரித்துள்ள நிலையில் மாற்று வருவாய் வழிகளை பயன்படுத்தி சுங்கவரி அழுத்தத்தை குறைக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், தங்கத்தை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யக்கூடிய நட்பு நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது, உள்நாட்டு தங்க மறுசுழற்சி திட்டங்களை ஊக்குவிப்பது போன்ற மாற்று முயற்சிகளும் அவசியம் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
உலக பொருளாதாரம் இன்னும் முழுமையான நிலைத்தன்மையை அடையாத சூழலில், தங்கத்தின் மீதான அதிக சுங்கவரி இந்திய மக்களின் மனதில் பொருளாதார அச்சத்தை அதிகரித்துள்ளதே தவிர, உடனடி நிம்மதியை அளிக்கவில்லை என முன்னாள் பேராசிரியர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

