Last Updated:
மத்திய அரசு தங்க இறக்குமதி வரியை 6 இலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது, தங்க விலை திடீர் ஏற்ற இறக்கத்தால் மக்கள் அதிர்ச்சி, கடத்தல் அதிகரிக்கும் என எச்சரிக்கை
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ஆறில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. திருமண சீசன் நேரத்தில் திடீரென ஏறி இறங்கும் தங்கத்தின் விலையால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியாவில் தங்கம் ஆபரண அணிகலன்களாக மட்டுமின்றி சேமிப்புக்கான சிறந்த முதலீடாகவும் காணப்படுகிறது. நடுத்தர வர்க்கம் தொடங்கி பெரும்பாலானோரின் சேமிப்பு திட்டத்தின் தொடக்கமாகவோ அல்லது சேமிப்பில் இன்றியமையாததாகவோ தங்கம் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
இந்தியாவில் மட்டும் 28 ஆயிரத்து 800 டன் தங்கம் கையிருப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தங்கத்தை பொறுத்தவரை இறக்குமதியையே இந்தியா எதிர்நோக்கியுள்ள நிலையில், ஆண்டு நுகர்வில் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் – அமெரிக்கா இடையிலான போரால் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் 60 டாலருக்கு விற்று வந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயை 106 டாலர் வரை விலையேற்றி உள்ளது.
இந்தியா இறக்குமதிக்கு டாலரையே நம்பியிருப்பதால் நாளுக்கு நாள் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி முகத்தில் உள்ளது.
இந்நிலையில், ஒராண்டுக்கு தங்கம் வாங்குவதை நாட்டு மக்கள் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார். அதன் நீட்சியாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது.
இதனால் சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று காலை சவரனுக்கு 8,560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது. கிராமுக்கு 1,070 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 15 ஆயிரத்து 400க்கு விற்பனையானது.
எனினும், மாலையில், தங்கம் விலை கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15ஆயிரத்திற்கும், சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
வைகாசி மாதம் தொடங்குவதால் திருமண வைபவங்கள் நடைபெறும் சூழலில் தங்கம் விலையேற்றம் அதிர்ச்சி அளிப்பதாக மக்கள் கூறுகின்றனர். அதேநேரம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு கடத்தலுக்கு வழிவகுக்கும் என தங்க நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இறக்குமதி வரி உயர்வுக்கு பதிலாக இறக்குமதியை குறைத்தால் ஜிடிபி வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.
Gold | தங்கம், வெள்ளி நகைகள் மீதான சுங்கவரி அதிகரிப்பு.. எகிறும் தங்கம் விலையால் பொதுமக்கள் அதிர்ச்சி.!


