சட்டவிரோதமான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் வீதிப் பாதுகாப்பையும் பொதுமக்களின் உயிர்பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில், வாகனங்களுக்கான உரிய தகுதிச் சான்றிதழ்கள் இன்றி ஆபத்தான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் இயக்கப்படுவதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
வீதி தகுதிச் சான்றிதழ்கள்
அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்துகள் தொடர்பான விசாரணைகளில், பல பேருந்துகள் அனுமதியின்றி மாற்றியமைக்கப்பட்டிருந்தமையும், அவற்றுக்கு செல்லுபடியாகும் வீதி தகுதிச் சான்றிதழ்கள் இல்லாததும் தெரியவந்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகளின் படி, அனுமதி பெறாத ஆபத்தான உதிரிப்பாகங்களை பொருத்துதல், அனுமதியின்றி நிறமிளக்கும் மின்னும் விளக்குகள் பொருத்துதல், அதிக சத்தமிடும் தரமற்ற ஒலிப்பான்கள் பயன்படுத்துதல், வாகனத்தின் அசல் நிறம், வடிவம், கட்டமைப்பை அனுமதியின்றி மாற்றுதல், அனுமதியின்றி விளம்பரங்கள், சித்திரங்கள் அல்லது உருவங்கள் ஒட்டுதல், அதிக சத்தம் எழும் வகையில் ஒலி ஒடுக்கிகளை மாற்றுதல், கூடுதல் பாகங்கள் பொருத்துதல் போன்றவை குற்றமாகும்.
மேலும், அதிக கரும்புகை வெளியிடும் அல்லது சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க முடியும்.
அதன்படி, சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனத்தின் இலக்கம், திகதி, நேரம் மற்றும் இடம் ஆகிய விபரங்களை 070 3500525 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கமாறு காவல்துறை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைத்து, உயிர்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[AMF75FB
]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

