நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஊடுருவி, திறைசேரியின் திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் ஒரு பகுதி, அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இணையவழி வணிகங்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள டெலாவேர் நிறுவனத்தின் பெயரில் அந்தக் கணக்கு இருந்து வந்ததாகவும், அதே மாநிலத்தில் உள்ள TD வங்கியின் ஒரு கிளையில் அது பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ள அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளுக்குச் சென்றுள்ள பணம்
2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் எவ்வளவு தொகை அந்தக் கணக்கிற்கு மாற்றப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனால் அது முழுத் தொகையும் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அந்தப் பணம் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளுக்குச் சென்றுள்ளது,” என்றும் சிறிலங்கா காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
எப்படி வெளிச்சத்திற்கு வந்தது இந்த தகவல்
சிறிலங்கா மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU), அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வுப் பணியகத்தின் (FBI) உதவியைக் கோரிய பின்னரே இந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நிதிப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறை , கிடைத்த தகவல்களை FBI மற்றும் அவுஸ்ரேலிய அதிகாரிகளுடன் பகிர்ந்து வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

