மாத்தறை – கொடபொல சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் குழந்தைகளிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதையடுத்து, குறித்த பகுதியில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (07.05.2026) மற்றும் நாளை (08.05.2026) ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாக ஹெட்டிகொட தெரிவித்துள்ளார்.
இதன்படி, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தேயு இருமொழிக் கல்லூரி மற்றும் பல்லேகம சித்தார்த்த கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சு
சுகாதாரத் திணைக்களத்தின் பரிந்துரைகளும் தென் மாகாண ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்ட பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய வைரஸ் காய்ச்சல் நிலைமை காரணமாக, தங்களது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தெனியாய ஐக்கிய பாடசாலை பேருந்து சங்கம் சார்ந்த 30 பாடசாலை பேருந்துகளும் மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெனியாய ஆதார வைத்தியசாலையில் கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளது.
கற்பித்தல் நடவடிக்கைகள்
மேலும், இந்த வார ஆரம்பத்திலிருந்தே பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக இருந்ததாகவும் பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இருப்பினும், உயர்தர வகுப்புகளுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் Zoom தொழில்நுட்பத்தின் மூலம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பாடசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

