கோலாலம்பூர் :
அண்மையில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நட்சத்திரமும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் அணிந்த ஆடை பற்றி, மலேசியாவின் பிரபல சமையல் கலை நிபுணரான ரெட்சுவான் இஸ்மாயில் சமூக ஊடகத்தில் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.


ஷெஃப் வான்’ என்று அழைக்கப்படும் ரெட்சுவான் இஸ்மாயில், ஐஸ்வர்யா ராய் அணிந்த ஆடையைப் பார்த்துவிட்டு , “ஐஸ்வர்யா ராய் காவடியை அணிந்துகொண்டு பத்துமலையில் நடைபெறும் தைப்பூச விழாவுக்குச் செல்கிறார்,” என்று அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
ஷெஃப் வானின் இந்தக் கருத்துக்கு மிகக் கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.


அவரது கருத்து இந்தியர்களையும் இந்து சமயத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகப் பலர் சாடினர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து ஷெஃப் வானிடம் விசாரணை நடத்துவதாக மலேசியாவின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.


ஷெஃப் வானுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை செந்தூல் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் அமாட் சுகார்னோ முகமட் ஸஹாரி உறுதி செய்தார்.
இந்நிலையில் “எனது கருத்துக்கள் ஐஸ்வர்யா ராய்க்கு ஏதேனும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால், நான் அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என்று 66 வயதான அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (மே 28) அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


