தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தால், இதை விட அதிக இடங்கள் நமக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள த.வெ.க கட்சி தலைவர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கான ஆட்சி பேச்சுவார்த்தை நீடித்து வருகின்ற நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டத்தை விஜய் பின்பற்ற கூடுமா என்ற கேள்விக்கு மத்தியில் குறித்த கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் நம்மை நம்பி இந்த அளவுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். யாரும் நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் நிபந்தனையுடன் ஆதரவு கரம் நீட்ட வந்தால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரிய வரலாற்றை உடைத்து வெற்றி
தி.மு.க மற்றும் அ.தி.மு.க என்ற இரு பாரிய வரலாற்றை உடைத்து வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்துக்கு 118 என்ற பெரும்பான்மை ஆட்சி அமைக்க தேவைப்படுகிறது.

இந்நிலையில் 108 என்ற ஆசணங்களை பெற்றுள்ள குறித்த கட்சிக்கு இன்னும் 10 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.
இதனை தக்கவைத்துக்கொள்ள இன்றும் இந்திய அரசியலும் உலகமும் மறக்க முடியாத ஒரு அரசியல் வரலாற்றை உருவாக்கிய முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நகர்த்தலை விஜய“ கையில் எடுக்ககூடும் என்ற கருத்துக்கள் வலுவடைய ஆரம்பித்துள்ளன.
எனினும் மறுபுறம் இந்திய காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆட்சியை பெற்றுக்கொடுப்பதற்கான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ள பின்னணியில் மொத்தம் 113 என்ற ஆசணங்களை த.வெ.க தற்போது கொண்டுள்ளது.
தேர்தல் வெற்றியையடுத்து, த.வெ.க வேறு எந்தக் கட்சிகளின் ஆதரவை பெறும் என்பது இங்கு எழுந்துள்ள மற்றுமொரு கேள்வி.
ஆட்சி அமைக்க அழைப்பு
இந்நிலையில், தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 2 வார கால அவகாசம் தருமாறு கேட்டுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க, டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் பாணியையே விஜய் பின்பற்றப்போகிறார் என பேசப்படுகிறது.
2012இல் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய கெஜ்ரிவால், அடுத்த ஆண்டே (2013) டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எனினும், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியானது டெல்லியில் ஆட்சி அமைத்தது.
ஆனால், ஜன லோக்பால் சட்டமூலத்தை சட்டசபையில் நிறைவேற்ற முடியாமல் போனதால், கெஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
ஆட்சி அமைத்து 49 நாட்களிலேயே ஆம் ஆத்மி அரசு கலைந்தது, 2015இல் மீண்டும் டெல்லியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
அந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மொத்தம் 70 தொகுதிகள். அதில் 67 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

