Last Updated:
பெங்களூருவில் கார் மீது உரசுவது போல சென்ற பைக் ஓட்டிகளை தட்டிக் கேட்டதால் தம்பதி மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சௌம்யதீப் சென் – வியுந்தரீலா பிரதான் தம்பதி பெங்களூருவில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று விடுமுறையை கழிக்க, காரில் வெளியே புறப்பட்ட ஜோடி, பெட்டதாசனபுரா சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ட்ராபிக்கில் வேகமாக பைக்கில் வந்த இளைஞர்கள், தம்பதியின் காரை மோதுவது போல சென்றுள்ளனர். இதனால் காரில் கீறல் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில், பைக்கில் சென்றவர்களைப் பெண்ணின் கணவன் “பார்த்து போங்கப்பா” எனக் கூறியுள்ளார்.
முகத்தைப் பார்த்ததும் வடமாநிலத்தவர் என்பதை தெரிந்து கொண்ட பைக் ஓட்டிகள், வண்டியை நிறுத்தி தம்பதியை ஒருமையில் பேசியுள்ளனர். அதை சௌம்யதீப் தட்டிக் கேட்க ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கி தம்பதி மீது ஆவேசத்தைக் காட்டி கைகலப்பில் ஈடுபட்டனர். பெண்ணின் கணவனைக் கண்மூடித்தனமாகத் தாக்கி காயப்படுத்தியவர்கள் தடுக்க முயன்ற பெண்ணையும் தாக்கினர்.
சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் ஒருகட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்தி தம்பதியை மீட்டனர். காயமடைந்த தம்பதியினர் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த பெங்களூரு காவல்துறை, தம்பதியை தாக்கியவரைத் தேடி வருகின்றனர்.
May 03, 2026 10:14 PM IST


