ஈரான் சமர்ப்பித்த புதிய முன்மொழிவு இருப்பது என்ன? டிரம்ப் ஏன் அதற்கு உடன்பட மறுக்கிறார்?
அதில் ஈரான் தனது சில அணுசக்தி நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முன்வந்துள்ளது. மேலும் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது என்றும், அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளில் சிலவற்றைத் தளர்த்த வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பும் உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பது இந்த முன்மொழிவின் முக்கிய அம்சமாகும்.
இந்த முன்மொழிவின்படி ஈரான் தனது அணுசக்தி நடவடிக்கைகளைத் தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்க முன்வந்துள்ளது. ஆனால், அமெரிக்கா ஈரானை Zero enrichment என உறுதியாகத் தெரிவிக்க வேண்டும் வலியுறுத்துகிறது. ஈரான் தனது 60% வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் பிற அணுசக்திப் பொருட்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதில் டிரம்ப் நிர்வாகத்திற்கும், ஈரானுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் அதிகரிப்பு
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்குப் பதிலாக, ஈரான் முழுமையான அணுசக்தி ஆய்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. டிரம்ப், ஈரான் அணு ஆயுதங்களை ஒருபோதும் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால், இந்த நிபந்தனைகளில் முழுமையான தெளிவு இல்லாத வரையில் சமரசத்திற்கு உடன்பட மறுக்கிறார். இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரான் ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயல்கிறது, ஆனால் நான் அதில் திருப்தி அடையவில்லை. ஒப்பந்தம் எதையும் செய்யாமலிருப்பதே எனக்கு நல்லது” என்று கூறினார். ஈரானிய ராணுவத்தின் மூத்த அதிகாரி முகமது ஜஃபர் அசாதி (Mohammad Zafar Azadi), “அமெரிக்கா எந்தவொரு உடன்பாட்டையும் மதிப்பதில்லை, எனவே மீண்டும் மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என எச்சரித்துள்ளார்.
அமெரிக்க தாக்குதல்களை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகும் ஈரான்!
இதுபோன்ற காரணங்களால் ஈரான் தனது வான்வழித் தற்காப்பு அமைப்புகளை முழுமையாக இயக்கி, அமெரிக்காவின் குறுகிய மற்றும் தீவிரத் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, ஹார்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை ஈரான் தொடர்ந்து இறுக்கமாக்கி வருகிறது. ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் கப்பல்களுக்கு ஈரான் தொடர்ந்து சுங்கக் கட்டணம் விதித்து வருகிறது. Smart Control of the Strait பயிற்சியின் மூலம் மேம்படுத்தப்பட்ட வேகப்படைப் படகுகள், கடற்படை சுரங்கங்கள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் அப்பகுதியைக் கண்காணிக்கும் திறனை ஈரான் மேம்படுத்தி வருகிறது.
தற்போதைய போரானது தங்களுக்கு சாதகமான ஒரு பலத்தை ஏற்படுத்தியுள்ளதாக நம்பும் ஈரான், தற்காப்புக்கான Target Bank-யை முழுமையாகப் புதுப்பித்து, அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளதாக ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான்
பதற்றத்தில் வளைகுடா பகுதிகள்!
சமரசத்தை பொறுத்தவரை, பாகிஸ்தான் மற்றும் ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தின்படி, ஈரான் படிப்படியான சமரசத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. அதில் முதலாவதாக போர் முடிவுக்கு வருதல், பின்னர் ஹார்முஸ் நீரிணையை திறப்பது மற்றும் புதிய கடல்சார் மேலாண்மை நெறிமுறைகளை உருவாக்குவது ஆகியவை அடங்கும். ஆனால், அணு ஆயுதங்களை முற்றிலும் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ஒருவேளை அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதனை எதிர்கொள்ள ஈரான் ஆயுதங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளோம் என தெரிவித்தது ஈரான். இதற்காக ஃபதே (Fateh) மற்றும் கியாம் (Qiyam) போன்ற நீண்ட தூரம் சென்று தாக்கும் தொடர் ஏவுகணைகளை ஈரான் முழுவீச்சில் தயார்ப்படுத்தி வருகிறது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து இவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்களில் சில ஏவுதளங்கள் மற்றும் ஏவுகணைகள் சேதமடைந்த போதிலும், பதுங்கு குழிகளில் பாதுகாக்கப்பட்ட ஏவுகணைகள் மூலம் உடனடியாக பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. குறைந்த உயரத்தில் பறந்து சென்று துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஷாஹெட் (Shahed) டிரோன்களை ஈரான் தயார் நிலையில் வைத்துள்ளது. அமெரிக்காவின் வான்வழித் தற்காப்பு அமைப்புகளை (Air Defense Systems) திசைதிருப்பவும், தளவாடங்களை சேதப்படுத்தவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
வான் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் ஈரான்…
ஹார்முஸ் நீரிணை மற்றும் அதனை ஒட்டியுள்ள வளைகுடா பகுதிகளில் அமெரிக்கப் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், உடனடியாகத் தாக்கக்கூடிய டிரோன்களையும் ஈரான் ஆயத்த நிலையில் வைத்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படையை எதிர்கொள்ள IRGC-யின் அதிவேகப் படகுகள் தயார்நிலையில் உள்ளன. அதிவேகமாகச் செல்லக்கூடிய சூப்பர்கேவிடேட்டிங் (Supercavitating) தொழில்நுட்பம் கொண்ட ஹூட் (Hoot) நீர்மூழ்கி ஆயுதங்கள், பெரிய போர்க்கப்பல்களைத் தாக்கப் ஈரான் பயன்படுத்தப்படலாம் என ராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ள ஈரான் தனது சொந்த தயாரிப்பான வான் பாதுகாப்பு அமைப்புகளை முக்கிய இடங்களில் நிறுத்தி வைத்துள்ளது.
“பாரசீக வளைகுடா நீரில் அமெரிக்கப் படைகள் மூழ்க வேண்டும்” – கமேனி
இந்நிலையில் ஹார்முஸ் நீரிணை குறித்து புதிய உச்ச தலைவரான அயதுல்லா மொஜ்தபா கமேனி (Ayatollah Mojtaba Khamenei), வெளியிட்டுள்ள அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அதில் “ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து வரும் அமெரிக்கப் படைகளுக்கு பாரசீக வளைகுடா பகுதியில் எந்த உரிமையும் இல்லை” என்றும், அமெரிக்கப் படைகள் வளைகுடா நீரில் மூழ்க வேண்டும் என்றும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு ஏன் பாரசீக வளைகுடா முக்கியம்?
ஈரானை பொறுத்தவரை பாரசீக வளைகுடா என்பது வெறும் கடல் நீர் அல்ல; அது ஈரானின் நாகரிகம் மற்றும் பிராந்திய அடையாளத்தின் ஒரு முக்கிய பகுதி என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நீர்ப்பகுதியை அரேபிய வளைகுடா என அழைக்க கூடாது என மிகவும் கண்டிப்பாக கமேனி வலியுறுத்தியுள்ளார். ஈரானில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30-ஆம் நாள் “பாரசீக வளைகுடா தேசிய நாள்” (Persian Gulf National Day) கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
1622-ஆம் ஆண்டில் போர்த்துகீசியக் கடற்படையை Hormuz தீவுப் பகுதியில் இருந்து பாரசீகப் படைகள் விரட்டியடித்ததன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தீவிரமடைந்த அமெரிக்கா-ஈரான் போர் இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், இந்த மோதலால் யாருக்கும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை; மாறாக அனைவரும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர் என்பதே தற்போதைய யதார்த்தம்.
பாரசீக வளைகுடா
போரில் இதுவரை ஏற்பட்ட பேரிழவுகள்...:
- ஈரானை பொறுத்தவரை போரின் தொடக்கத்திலேயே உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அத்துடன் ஈரான் தரப்பில் 3,400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் 26,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஈரானின் பொருளாதாரம் டிரில்லியன் டாலர் வரை இழப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் கடற்படை முற்றுகை காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி முற்றிலும் முடங்கி, நாட்டின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவில், பென்டகன் மற்றும் சர்வதேச நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, போரின் நேரடிச் செலவுகள் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க பணவீக்கத்தை கடுமையாக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை கடும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. இஸ்ரேல் நாட்டிற்கும் பெரும் பொருளாதார மற்றும் பாதுகாப்புச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
- இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது நடத்திய தாக்குதல்களால் சுமார் 2,500 பேர் பலியாகினர். பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். உலக அளவில், 1970-களுக்குப் பிறகு வரலாற்றில் மிக மோசமான எரிசக்தி விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில் போரை முடிவுக்கு கொண்டுவர ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார் என்பது, மீண்டும் மீண்டும் மோசமான சூழலையே ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

