நாட்டின் எரிசக்தி துறையில் ஒரு நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலைகள் அதிகரித்துள்ளதாலும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் சுமை
இந்தநிலையில் பொதுமக்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் தற்போது ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இன்று ஒரு லீட்டர் டீசலின் உண்மையான விலை 482 ரூபாயாகும் ஆனால், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஊடாக அரசாங்கம் லீட்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவதால் நுகர்வோரால் அதனை 382 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடிகிறது.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் போதிலும் இந்த மானியத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அரசாங்கம் 60 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
எதிர்காலத்தில் சிறிய அளவிலான எரிபொருள் விலை திருத்தங்கள் தேவைப்படலாம் என்றாலும் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
விலை அதிகரிப்பு
விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, நாம் சிறிய அளவிலான விலை அதிகரிப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும்.
இருப்பினும் அதிகபட்ச மானியங்களை வழங்கவே நாம் உழைக்கிறோம், நிலக்கரி மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் எரிசக்தி துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மின்சாரத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கிய ஜனாதிபதி, நிலக்கரி விலையேற்றம் மற்றும் நீர்மட்டம் குறைவு காரணமாக மின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் 96 சதவீத மின் நுகர்வோருக்கு எவ்வித கட்டண அதிகரிப்புமின்றி மின்சார மானியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அதற்காக 15 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

