பாதுகாப்புத் தரநிலைகளில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்றும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மீறும் எந்தவொரு முயற்சிக்கும் அடிபணியப் போவதில்லை என்றும் புஸ்பகோம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தனது சேவையின் தரம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, பொதுமக்களிடமிருந்து வரும் ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்பதாகவும் அந்த வாகன ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அனைத்து கருத்துக்களும் பொறுப்பான முறையிலும், முறையான வழிகள் மூலமாகவும் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அது கூறியுள்ளது.
ஏப்ரல் 23 அன்று பட்டு பகாட் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி புஸ்பகோம் இவ்வாறு தெரிவித்தது. வைரலான டிக்டாக் நேரலை ஒளிபரப்பு ஒன்று, புஸ்பகோம் ஆய்வு அதிகாரியை அவதூறு செய்ததாக நீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வியாபாரி 80,000 ரிங்கிட் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதுகாப்பு ஆய்வுத் தரநிலைகளை பூர்த்தி செய்யாத வாகனத்தை நிராகரித்ததன் மூலம், தனது பணியை நேர்மையுடன் செய்த அந்த அதிகாரியை புஸ்பகோம் பாராட்டியுள்ளது.
பாதுகாப்பு, இணக்கம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்காக எங்களது ஆய்வு செயல்முறைகள் கடுமையான நெறிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன, என்று அது கூறியுள்ளது.
எங்கள் ஊழியர்களின் கண்ணியத்தையும் தொழில்முறை நற்பெயரையும் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்; அவர்களின் நேர்மையைக் குலைக்கும் எந்தவொரு குற்றச்சாட்டுகளும் முறையாகவும் தீவிரமாகவும் கையாளப்படும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஸ்பகோம் தலைமை நிர்வாக அதிகாரி மஹ்மூத் ரசாக் பஹ்மான் கூறுகையில், பொறுப்பான தகவல் தொடர்பின் அவசியத்தை இந்த வழக்கு ஒரு முக்கிய நினைவூட்டலாக உணர்த்துகிறது என்றார்.
பொதுவெளியில், குறிப்பாக டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்; எனவே அவை உண்மை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
-fmt
