கோலாலம்பூர்:
ஜோகூரில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் மலேசிய மோட்டார் சைக்கிளோட்டிகளும் பேருந்துப் பயணிகளும் விரைவில் விரைவு தகவல் குறியீட்டைப் பயன்படுத்தலாம். வரும் சனிக்கிழமை (1 ஜுன்) முதல் அது நடப்புக்கு வரும்.


கடப்பிதழ்களைப் பயன்படுத்தாமல் மைசெஜாத்ரா அல்லது மைடிஜிட்டல் ஐடி செயலிகள் உருவாக்கும் விரைவுத் தகவல் குறியீட்டை அவர்கள் பயன்படுத்தலாம். சிங்கப்பூருடன் இணைந்திருக்கும் இரண்டு நிலச் சோதனைச் சாவடிகளுக்கும் புதிய நடைமுறை பொருந்தும்.


ஜோகூர் காஸ்வே, செக்கண்ட் லிங் நிலச் சோதனைச் சாவடிகளில் உள்ள நெரிசலை பற்றிய சந்திப்பில் மலேசியத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசோப் அந்த விவரங்களை அறிவித்தார்.
இதற்குமுன் தொழிற்சாலைப் பேருந்துகளில் பயணம் செய்யும் மலேசியர்கள் மட்டுமே சோதனைச் சாவடியில் விரைவுத் தகவல் குறியீட்டைப் பயன்படுத்த முடிந்தது.இப்போது மோட்டார் சைக்கிளோட்டிகளும் அதில் பயன்பெறுவர். இப்புதிய திட்டம் 3 மாதங்களுக்குச் சோதிக்கப்படும்.


அதன் பிறகு இரண்டாம் கட்டம் தொடங்கும். அதில் மலேசிய தனியார் வாகன ஓட்டுநர்கள் சேர்க்கப்படுவர். திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் சிங்கப்பூரர்களும் மற்ற வெளிநாட்டவர்களும் விரைவுத் தகவல் குறியீட்டைப் பயன்படுத்தி நிலச் சோதனைச் சாவடிகளைக் கடப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.


