ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து முடங்கியுள்ள நிலையில் அங்கு கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்ய கடல்சார் சுதந்திரக் கட்டமைப்பு எனும் புதிய கூட்டணியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய இராஜதந்திர முயற்சிகளை ஒருங்கிணைத்தல், பொருளாதாரத் தடைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தகவல்களைப் பகிர்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் கடல்வழி முற்றுகைகளைத் தொடர்ந்து வருவதால் உலகளவில் எரிபொருள் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ செய்தி
இந்த வாரத் தொடக்கத்தில் உலகெங்கிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தக் கூட்டணியில் இணைவதற்கு நட்பு நாடுகளின் பங்களிப்பைக் கோருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ரஷ்யா, சீனா, பெலாரஸ் மற்றும் கியூபா உள்ளிட்ட நாடுகளுடன் இது குறித்து விவாதிக்க வேண்டாம் என்று தூதர்களுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவை யுஎஸ் சென்ட்ரல் கமாண்ட் (US Central Command) மூலம் இந்த அமைப்பை வழிநடத்தவுள்ளதுடன் இதில் இணையும் நாடுகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப தகவல் பகிர்வு அல்லது கடற்படை பாதுகாப்பு போன்ற வழிகளில் பங்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்முக முயற்சி
ஏற்கனவே பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்த நீரிணையைப் பாதுகாப்பதற்கான பன்முக முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்தப் புதிய கூட்டணி அதற்கு மேலதிக பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகள் போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடி வரும் நிலையில் உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக இந்த MFC கூட்டணி முன்னிறுத்தப்படுகிறது.
ஒருவேளை அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், இந்த நீரிணையில் சர்வதேச இராணுவப் படைகள் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
