Last Updated:
Kerala Exit Poll 2026 Results : 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியை கைப்பற்றியதன் மூலம் கேரள அரசியலில் தனது இருப்பை பாஜக உறுதிசெய்தது
கேரள மாநிலத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. முன்னெப்போதும் இல்லாத எழுச்சியாக, இந்தத் தேர்தலில் 78.27% வாக்குகள் பதிவாகின. இது 1987-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு (அப்போது 80.54%), கடந்த நான்கு தசாப்தங்களில் பதிவான மிக அதிகப்படியான வாக்குப்பதிவாகக் கருதப்படுகிறது.
கேரள அரசியலில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்து வரும் எல்.டி.எஃப் (LDF) கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கப்போகிறதா அல்லது காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் (UDF) கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று வெளியான சி.என்.என். நியூஸ் 18′ நிறுவனத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு (Exit Poll) முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன
கேரள அரசியல் களம்: கேரள அரசியல் களத்தில் பல பத்தாண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (UDF) ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனினும், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2025 உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு எதிரான மனநிலை மக்களிடையே வெளிப்படையாகக் காணப்பட்டது. காங்கிரஸ்- இடது சாரி என்ற இருமுனை போட்டியாக இருந்த கேரள அரசியல் களத்தில் இன்று பாஜக தவிர்க்கமுடியாதபடி உள்வாங்கபட்டிருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியை கைப்பற்றியதன் மூலம் கேரள அரசியலில் தனது இருப்பை பாஜக உறுதிசெய்தது. அதைத் தொடர்ந்து, 2025ம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியைப் பாஜக கைப்பற்றியது. இது, தேசியளவில் கவனத்தை ஈர்த்தது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும், பாஜக தனது வாக்கு வங்கியை 5% சதவீதத்தில் இருந்து 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தியுள்ளது. இது, கேரள அரசியலின் மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.
கேரளாவில் 45%க்கும் மேற்பட்டோர் இஸ்லாம், கிறித்தவத்தை பின்பற்றுகின்றனர். இந்த சமய மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிக்கின்றனர். தொடக்க காலத்தில் பாஜகவின் வளர்ச்சி என்பது காங்கிரஸின் வாக்கு வங்கியில் ஒரு சிறிய சரிவை ஏற்படுத்திய போதிலும், சிறுபான்மையினரின் ஒருங்கிணைந்த ஆதரவு காங்கிரஸை வலுவான நிலையில் வைத்தது. இருப்பினும், காங்கிரஸ் கட்சிக்கும் நிலவும் உட்கட்சி பூசல் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சமீபத்திய பாஜக வளர்ச்சி ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக கருதப்படும் ஈழவா உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஆதரவு, தற்போது பாஜகவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. எவ்வாறாயினும், கேரள மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் வரலாறுகளை பிரதிபலிக்கும்படியான அரசியல் சொல்லாடல்களை உருவாக்குவதில் பாஜக தடுமாறுவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளன.
கருத்து கணிப்பு முடிவுகள்: இடங்கள்: கேரளத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 70-80 இடங்களை கைப்பற்றும், சிபிஎம் தலைமையிலான கூட்டணி 59-68 இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 0-1 இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி அமைகிறது.


